செவ்வாய், 21 ஜூலை, 2009

புதையாது காதல்!!

இதயம் நுழைந்து
என்னைத் திருடும் வரை
துணிவோடுதானே இருந்தாய்..?

போகப் போக
பொருளாதார வீழ்ச்சி எனும்
புதைகுழியில் நீ வீழ்ந்தபோது
நம் காதலையும் சேர்த்து
ஏன் புதைத்தாய்?

ஒவ்வொரு முறையும்
நான் மாறாத காதலெனும்
கயிறு கொண்டு
உன்னைத் தூக்கும்போதெல்லாம்...
அவநம்பிக்கைச் சகதியில்
நீயாகவே விழுகிறாய்!

விரக்தியும் சலிப்புமாய்
குழிக்குள் நீயும்...
மீட்டுவிடும் உறுதியோடு
வெளிப்புறத்தில் நானுமென
தொடர்கிறது
ஒரு தாம்பத்யப் போராட்டம்!

உன் பயத்தை
வாழ்க்கை தந்தது...
என் துணிவை
காதல் தந்தது...
நிச்சயம் ஜெயிக்கும் காதல்!!

வெள்ளி, 10 ஜூலை, 2009

அன்பே வா









ஒரு பார்வை பார்க்கிறாய்
புதிதாய் நான் பூக்கிறேன்
இதயம் இடம் மாறுதே

இது காதலா
....................................
நிலவோடு தேய்கிறேன்
நினைவாலே கரைகிறேன்
சுகமான வேதனை இது காதலா........................
எங்கேயோ எங்கோயோ விண்மின்கள் சிதறுதே

கண்ணுக்குள்ளே கண்ணுக்குள்ளே ..
காதல் வந்து போவதேன்
என்ன இது என்ன இது ..

வானவில்லில் வானம் ரெண்டு கூடுதே
தீண்டினால் வானிலே மேகமாய் அலைகிறேன்
நீங்கினால் தூரத்தில் புள்ளியாய் தொலைகிறேன்

நில்லென்றால் நில்லாமல்
ஏனென்று கேளாமல்
ஏதேதோ செய்கிறாய் ஏனடி!

அன்பே வா அன்பே வா அன்பே வா ஆ .............

என்ன சொல்லி என்ன சொல்லி காதல் அதை உன்னிடத்தில் காட்டுவேன் சத்தமின்றி சத்தமின்றி மௌனமாய் நெஞ்சுக்குள்ளே பூட்டுவேன்
கவிதைகள் எழுதிட வார்த்தைகள் தேடினேன்
உன் பெயர் எழுதினால் கவிதையாய் பாடினேன்

என் உள்ளே என் உள்ளே
உன் கண்ணின் மின்சாரம்
ஏதேதோ செய்யுதே
ஏனடி
அன்பே வா
அன்பே வா
அன்பே வா
வா


More Details
watch on vijay tv monday- thursday 7.30pm(india)

சனி, 4 ஜூலை, 2009

காதல் ரகசியம்


சுமேஷூக்கு ஆபீஸில் வேலையே ஓடவில்லை. வெண்ணிலாவை இரண்டு நாளைக்கு முன் கண்மூடித்தனமாகத் திட்டியதும்.. அவள் அழுகையை நடிப்பென்று விமர்சித்ததும்.. அதனால் இந்த இரண்டு நாட்களாக அவளிடம் பேச்சு வார்த்தையே அற்றுப் போயிருப்பதும்.. அவள் தயார் செய்து வைக்கும் டிபன் பாக்ஸை மட்டும் எடுத்துக் கொண்டு ஒரு வார்த்தை கூடப் பேசாமல் யந்திரம் போல கிளம்பி வருவதும்.. மாறி மாறி அவனை வதைத்துக் கொண்டிருந்தன.

வெண்ணிலாவுக்கு 'காக்கை குருவி எங்கள் ஜாதி' என்பதுதான் வேதம். தன்னைக் கொட்டிய தேளைக் கூட அடிக்க விட மாட்டாள். 'தூரத்துல எங்கயாவது கொண்டு போய் விட்டுடலாமே' என்று கெஞ்சுவாள். பிறந்த வீட்டில், இருபது லவ் பேர்ட்ஸூம், ஒரு கிளியும், மூன்று பூனைக் குட்டிகளும் வளர்த்தவள். தெருநாய்களுக்கெல்லாம் அன்னை தெரசாவாகத் தெரிந்தவள். இன்றும் அந்த அன்பு தொடர்கிறது. ஆனால், சுமேஷூக்கு இதெல்லாம் பிடிக்காது என்பதால் வீட்டுக்குள் எந்த ஜீவராசியும் பிரவேசிப்பதில்லை.

ஒன்றுமில்லை.. அன்று பக்கத்து வீட்டு நாய்க்குட்டியை வெண்ணிலாவின் கையில் பார்த்தவுடன்தான் சுமேஷூக்குள் எழுந்தது அந்தப் பேய்க் கோபம். ''நீ எக்கேடும் கெட்டுப் போ.. வீட்டுல மூணு வயசுல ஒரு குழந்தை இருக்கான்ல..? இந்த சனியன் அவனைக் கடிச்சு வச்சா என்ன பண்றது..?'' என்று ஆரம்பித்தவன், ''மிருகங்களோட பழகுறவளை மிருக ஜென்மம்னுதான் சொல்லணும்.. நீயெல்லாம் ஒரு மிருகத்தையே கட்டிக்கிட்டிருக்க வேண்டியதுதானே'' என்று தீ கக்க ஆரம்பித்தான். எல்லாம் ஆபீஸ் டென்ஷனின் பக்க விளைவுகள்தான். வீட்டுக்கு வீடு வாசப்படி!

''ச்சே.. என்ன மனுஷன் நான்..? கல்யாணமாகி அஞ்சு வருஷம் கழிச்சும் சொந்தப் பொண்டாட்டியைப் புரிஞ்சுக்கலையே.. அவ எப்பவுமே இப்படித்தான்னு தெரியுமே.. அதுக்குப் போய் அவளை..'' அவன் மனம் நிலைகொள்ளாமல் தவித்தது. 'இன்னிக்காவது நானே போன் பண்ணி மன்னிப்புக் கேட்டுடணும்..' விறுவிறுவென செல்போனை எடுத்தவன், வெண்ணிலாவின் எண்ணைத் தேடினான். வசந்த்.. வெங்கட்.. விஜய்.. என்ன இது? வெண்ணிலாவின் பெயரையே காணவில்லை!

'எப்பிடி..? ஒரு வேளை நான் தூங்கிட்டிருந்தப்போ அவளே எடுத்து அழிச்சிருப்பாளோ? அந்த அளவுக்கா அவளைக் காயப்படுத்திட்டோம்?' - சுமேஷூக்குக் குற்றவுணர்ச்சி தாங்க முடியவில்லை. 'ஒருவேளை, அந்த நம்பரை மனசுல வச்சிருக்கானானு டெஸ்ட் பண்றாளோ? இப்ப என்ன பண்றது?' - யோசனைகள் ஓடிக் கொண்டிருக்கும்போதே அவன் செல்போன் ஒலித்தது.

அழைப்பவரின் பெயர் வித்தியாசமாக, 'உன் செல்லம் பாவமில்ல..?' என்று நீளமாக வந்தது. எடுத்தான். மறுமுனையில் ''சாப்ட்டீங்களா?'' என்றாள் வெண்ணிலா. கள்ளி! சுமேஷூக்குத் தெரியாமல் அவன் போனை எடுத்து தன் பெயரைத்தான் இப்படி மாற்றியிருக்கிறாள். ''ஸாரி, சுமி! இனிமே நான் நாய்க்குட்டி, பூனைக் குட்டியையெல்லாம் தொடவே மாட்டேன்'' - அவளே தொடர்ந்து பேசினாள்.

'பாவி, மன்னிப்பு கேட்கும் விஷயத்தில் கூட தன்னை முந்திக் கொள்கிறாளே.. இந்த அழகான ராட்சஸி!' என்று பரவசம் பாய்ந்தது அவனுக்குள். 'கடவுளே.. இது பெட்ரூமா இருக்கக் கூடாதா' என்று மனசுக்குள் காட்டுக் கத்தல் கத்தினான். உடனடியாக ஆபீஸில் பர்மிஷன் போட்டுவிட்டு வீட்டுக்கு வந்தான் சுமேஷ். அடுத்த நாள் காலையும் ஒரு மணி நேரம் பர்மிஷன் போட வேண்டியது வந்தது!

வெண்ணிலா எப்போதுமே இப்படித்தான். கல்யாணம் ஆனதிலிருந்து சுமேஷின் ஒவ்வொரு நொடிப் பொழுதையும் ரொமான்ஸ் குறையாமல் வைத்திருந்தாள். அவனுக்குப் பிடித்தவற்றை குறித்து வைத்துக் கொண்டு சமைப்பது, ஆட்டோமொபைல் கம்பெனியில் மேலாளராக இருக்கும் அவனுக்கு, புதிதாக அறிமுகமாகவிருக்கிற கார்கள் பற்றிய செய்தியை வெட்டி எடுத்துக் கொடுப்பது.. என்று தனது அன்பால் ஒவ்வொரு நாளையுமே அசத்தி விடுவாள்.

இத்தனை செய்கிறவளுக்கு சுமேஷ் என்னதான் பரிசு தருவான்? வெறும் புடவையும் நகையுமா? இல்லை! வித்தியாசமாக ஒன்று தர ஆசைப்பட்டான். அதற்காகத்தான் ஒரு நாள் திட்டமிட்டான்.

''டி.நகர் வரை வர்றேல்ல.. அப்பிடியே ஒரு ஆட்டோ எடுத்துட்டு என் ஆபீஸ்க்கு வந்திடு. ரெண்டு பேருமா சேர்ந்து வீட்டுக்குப் போய்டலாம்'' என்று காலையிலேயே அவன் கட்டளையிட, அவள் குழந்தையும் ஷாப்பிங் கவர்களுமாக அங்கு போய்ச் சேர்ந்தாள்.

வாசல் வரை வந்து உள்ளே அழைத்துப் போனவன், தன் அறைக்குள் தன் ஸீட்டின் மீது வெண்ணிலாவை உட்கார வைத்து அழகு பார்த்தான். அந்த இருக்கைக்குப் பக்கத்திலேயே ஒரு கண்ணாடி ஜன்னல், 'அது மூன்றாவது மாடி' என்பதை அறிவித்தது. அந்த வளாகத்திலேயே உள்ள மாமரம் ஒன்று தன் கிளைகளால் அந்த ஜன்னலை வருடியிருந்தது. ''குட்டிப் பையா.. மாங்கா பாரு..'' என்று ஜன்னலைக் காட்டி, குழந்தைக்கு விளையாட்டு காட்டுவதில் மும்முரமானாள் வெண்ணிலா.

''நிலா.. அந்த டிராவைத் திறயேன்'' என்றான் சுமேஷ்.

திறந்தால் அதற்குள் கவர் பிரித்த ஒரு பாப்கார்ன் பாக்கெட் இருந்தது. அதிலிருந்து ஒன்றிரண்டு பாப்கார்ன்களை எடுத்தான். கண்ணாடி ஜன்னலை லேசாகத் திறந்து, சற்று நீண்டிருக்கும் ஸ்லாபில் அந்த பாப்கார்னை வைத்து மூடினான்.

''வெய்ட் பண்ணு.. சில விருந்தாளிங்க வருவாங்க'' என்று அவன் சொல்லி முடிக்கும் முன், பெரிய்ய்ய்ய வாலை ஆட்டியபடி ஓடி வந்தார்கள் அந்த விருந்தாளிகள். பாப்கார்னை தங்கள் முன்னங்கால்களால் எடுத்துச் சாப்பிட்ட அந்தச் சின்னஞ்சிறிய அணில்களை.. திறந்த வாயும் விரிந்த கண்களுமாகப் பார்த்த நிலா சந்தோஷத்தில் தன்னை மறந்து குதித்தே விட்டாள்.

வீடு திரும்புகிற வழியெல்லாம் அணில் பேச்சுத்தான்! ''ச்சே! என்ன அழகு சுமி..! ஒருமுறை டி.வி-யில மட்டும்தான் அணிலை இவ்வளவு க்ளோஸா பார்த்திருக்கேன். ச்சோ ச்வீட்.. ஐ லவ்யூடா'' எனச் சொல்லிச் சொல்லி மாய்ந்து போனாள். தாமதமாகத்தான் அவளுக்கு அந்த சந்தேகம் வந்தது.

'சுமி.. உங்களுக்குத்தான் இந்த ஸில்லி ஜீவன்களைப் பிடிக்காதே.. இப்படி பாப்கார்ன் போட்டு ரசிக்கிறதெல்லாம் எப்போத்துல இருந்து?'' என்றாள் அவள். பைக்கைக் கொஞ்சம் ஸ்லோ செய்து, ஹெல்மெட் கண்ணாடியை எடுத்து விட்டுக் கொண்டு அவன் சத்தமாக பதில் சொன்னான்.. ''கல்யாணம் ஆனதுல இருந்து!''

''கடவுளே இது பெட்ரூமா இருக்கக் கூடாதா?'' - வாய்விட்டே சொல்லிவிட்டாள் வெண்ணிலா!!

.


வெள்ளி, 3 ஜூலை, 2009

சனி, 27 ஜூன், 2009

இனிய இல்லறம்

''எங்க வீடுன்னா உங்களுக்கு ஒரு இளக்காரம்! எப்பவும் இப்பிடித்தான். எங்க பிரபா கல்யாணத்துக்குக்கூட பெரிய்ய வி.ஐ.பி மாதிரி சரியா தாலி கட்டுற நேரத்துக்குத்தான் வந்தீங்க..''

ஆரம்பித்து விட்டாள் பிருந்தா! எரிச்சலாக இருந்தது தனேசுக்கு.

''அது எவ்வளவு 'டைட்' ஆன டைம்னு உனக்கே தெரியும். ஆபீஸ்ல ஆடிட்டிங் நடந்துட்டு இருந்தது. அந்த சமயத்துல நான் கல்யாணத்துக்கு வந்ததே பெரிய விஷயம்.. இதை நான் உன்கிட்ட பல தடவை சொல்லியிருக்கேன்..'' - குரலில் உஷ்ணம் காட்டிச் சொன்னான் தனேஷ்.

''ஆமா.. பெரிய டைட். உங்க ஆபீஸ் வேலை எப்பதான் லூஸா இருந்திருக்கு? பிறந்த வீட்டுல வச்சு அவமானப்பட்ட நான்தான் லூசு. ஊரே கேட்டுச்சு.. 'பிருந்தா மாப்பிள்ளை வரலையா?'னு!''

இரண்டு வருடம் முன்னால் நடந்து முடிந்த பிருந்தாவின் தங்கை பிரபாவின் கல்யாணம், இன்று வரையிலுமே பல சண்டைகளுக்கான அஸ்திவாரமாக இருக்கிறது.

''எங்கம்மாவுக்கு நாலு நாளா காய்ச்சல். என்ன ஏதுனு ஒரு போன் போட்டு விசாரிங்களேன்.. குறைஞ்சா போய்டுவீங்க?'' என்று அவள் காலையில் சொல்ல,

''காய்ச்சல்தானே பிருந்தா.. சரியாகிடும். இதைப் போய் நான் என்னனு விசாரிக்க? நீ கேட்டிருப்ப இல்ல..'' என்று இவன் பதில் சொல்ல..

''உங்கம்மாவுக்குப் போன வாரம் அடிபட்டதே.. அதை மட்டும் கேக்கத் தெரியுது. எங்க அம்மான்னா..'' என்று துவங்கி, அவள் பேசியது.. இல்லை.. கத்தியதுதான் முதல் பாரா! திட்டத் துவங்கி விட்டால்.. வாயில் என்ன வருகிறது என்பதுகூடத் தெரியாது பிருந்தாவுக்கு!

எதற்கும் எதற்கும் முடிச்சுப் போடுகிறாள்? பாவம்.. வயதான காலத்தில் பாத்ரூமில் விழுந்து அடிபடுவதும், நாலு நாள் காய்ச்சலும் சமமா? அடிபட்டுக் கிடக்கும் அம்மாவைப் போய்ப் பார்த்து வரக்கூட நேரம் இல்லாமல் வேலை வேலை என்று கிடக்கிறவனிடம் பேசுகிற பேச்சா இது? இருந்தாலும் கோபத்தைக் கட்டுப்படுத்தியபடி கேட்டான்..

''அம்மாகிட்ட பேசினியா பிருந்தா? 'பிருந்தாவைப் பேசச் சொல்லுப்பா'னு சொன்னாங்க. கீழ விழுந்ததுல நல்ல அடி.. பாவம்!'' - இவ்வளவுதான் சொன்னான். ருத்ரதாண்டவம் ஆடிவிட்டாள்.

''எதுக்கு விசாரிக்கணும்? இல்ல.. எதுக்குனு கேக்குறேன். சின்னதா ஒரு அடி.. அதுக்கு அவங்க அங்கருந்து டிராமா பண்றாங்க. நீங்க இங்கருந்து துடிக்கறீங்க.. கேமரா முன்னாடி நடிச்சா, ஆஸ்கர் கெடைக்கும்!''

இதற்கு மேல் அந்த இடத்தில் ஒரு விநாடி இருந்தாலும் பூகம்பம் வெடிக்கும் என அவனுக்குத் தெரியும். சட்டையை எடுத்து மாட்டியவன், விட்ட ஒரே உதையில் ஸ்டார்ட் ஆனது பைக்!

காலையில் குளிக்காமல்.. சாப்பிடாமல்.. கிளம்பிப் போனவனிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. இரவு எட்டு மணி வரை வீம்பாக இருந்த பிருந்தாவுக்கு அதற்கு மேல் நிலைகொள்ளவில்லை. கோபமாகக் கிளம்பிப் போனாரே.. அந்தக் கோபத்தையெல்லாம் வண்டியை ஓட்டுவதில் காட்டி.. எங்காவது விழுந்து.. நினைவே உலுக்கிப் போட்டது.

வேக வேகமாக செல்போனை அழுத்தினாள்.. 'ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது' என்று வந்த பதிவு செய்யப்பட்ட குரல், அவள் பயத்தை அதிகப்படுத்தியது. தனேஷின் அலுவலகத்துக்கு போன் செய்தால் அடித்துக் கொண்டே இருந்தது.

மணி ஒன்பதாகி.. பத்தும் ஆக.. பதறிப் போனாள் பிருந்தா. எத்தனை கோபம் என்றாலும் இவ்வளவு நேரமாக வராமல் இருக்க மாட்டாரே!

''கடவுளே.. என் புருஷனை பத்திரமா மீட்டு வந்து குடுத்தா 108 தேங்கா உடைக்கிறேன்!'' என்று வேண்டுதலும் விம்மலுமாய் நேரம் கரைந்து கொண்டிருந்தபோதுதான் அவளுடைய செல்போன் ஒலித்தது.. அவள் தம்பியின் பெயரைக் காட்டியபடி! இந்த நேரத்தில் இவன் ஏன் போன் செய்கிறான்? ஒருவேளை இவருக்கு ஏதாவது ஆகி.. இவனுக்கு தகவல் போய்.. கடவுளே..

''ஹலோ..'' என்று சொல்ல நினைத்தாளே தவிர, கேவல்தான் முந்திக் கொண்டு வந்தது. மறுமுனையில் ஹலோ சொன்னது தம்பி அல்ல.. தனேஷ்! அவன் குரலைக் கேட்டதும்தான் உயிரே வந்தது அவளுக்கு.

நடந்தது என்ன என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டவளுக்கு அத்தனையும் கனவு போலதான் இருந்தது! வேலை விஷயமாக திடீரென்று கிளம்பி சென்னை வந்த அவள் தம்பி, ஒரு விபத்தைச் சந்தித்ததும், அரை மயக்கத்தில் அவனே போன் பண்ணி தனேஷை அழைத்ததும், தனேஷ் போய் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டதும்..

வீட்டுக்கு வருகிறவர், போகிறவரிடமெல்லாம் சொல்லிச் சொல்லி மாய்கிறார் பிருந்தாவின் அப்பா..

''பிருந்தா மாப்பிள்ளைதான் சரியான நேரத்துக்கு ஆஸ்பிடலுக்குத் தூக்கிட்டுப் போயிருக்கார். லேட்டா போயிருந்தா ரத்தம் நிறைய வீணாப் போயிருக்குமாம். அது பெரிய ஆஸ்பிடல் இல்லியா? ஒடனே அம்பதாயிரம் ரூபா கட்டணும்னு சொன்னாங்களாம். பணத்தைப் பொரட்டி, கட்டி, ஆபரேஷன் பண்ணினா நடக்கவே முடியாம போய்டுமோனு பயந்தவனுக்கு ஆறுதல் சொல்லி, எங்களுக்கும் பதமா போனைப் பண்ணி வர வச்சு.. இவரு எங்களுக்கு மருமகன் இல்ல.. மகன்!''

'தன் குடும்பத்தின் மேல் துளிக்கூட அக்கறை இல்லை' என்று தான் முந்தின தினம்தான் குற்றம் சாட்டிய கணவனைப் பற்றி உருகி உருகி தன் தந்தை பேச, குற்ற உணர்வு தாங்காமல் அவள் கன்னங்களில் வழிந்தோடியது கண்ணீர்.
'என் கணவர் இத்தனை அன்பு நிறைந்தவரா? இல்லை இல்லை.. அன்பே உருவானவரா? இத்தனை நல்ல இதயத்தையா இந்த அளவுக்குக் காயப்படுத்தி இருக்கிறேன்! என்னென்ன வார்த்தைகளையெல்லாம் பேசியிருக்கிறேன்! ச்சே! நானெல்லாம் என்ன ஜென்மம்!'

அழுது கொண்டே இருக்கிறாள் பிருந்தா.

அவளுக்காவது பரவாயில்லை.. தனேஷைப் புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது. அப்படிக்கூட ஒரு வாய்ப்பு கிடைக்காமல் எத்தனை கணவர்களோ! எத்தனை மனைவிகளோ!

நாம் எப்படிப்பட்ட துணை? யோசிப்போம்!

புதன், 24 ஜூன், 2009

காதல் டூயட்



''
போதும் உங்கள கட்டிக்கிட்டு நான் படற அவஸ்தை. காதல்னா என்னனு தெரியாத ஜென்மம். எத்தனை ஆசையோட, எதிர்பார்ப்போட இருந்தேன் தெரியுமா..!'

''கத்தி மூக்கில் காதல் நெஞ்சை காயம் செய்து மாயம் செய்தாளே..!''

- தன் மொபைல் மியூசிக் ஃபைலில் இருக்கும் 'டூயட்' பட பாடல் வரியை கேட்கும்போதெல்லாம், தன் கூர்நாசியை கண்ணாடியில் பார்த்து சிலிர்த்துக் கொள்வாள் தீபிகா. தாவணி போட்ட நாளில் இருந்தே தன் வருங்காலக் கணவன் குறித்து கலர் கலராக கனவுகள் சுமந்தவள். சூரியக் குமாரனாக அவன் வருவான்; திகட்டத் திகட்ட காதல் தருவான்; 'தீபு' என்ற வார்த்தையையே திருவாசகமாய் ஒலிப்பான்; தினம் தினம் நம் நாட்கள் திருவிழாவாக நகரும் இப்படியெல்லாம் நினைப்பில் மிதந்தவளுக்கு வந்த வரன்தான் குமரன்.

நிச்சயதார்த்தம் முடிந்தபின் துளிர்த்த அவர்களின் செல்பேசி உரையாடல்களின் பெரும்பகுதியில் ஷேர் மார்கெட், அமெரிக்க தேர்தல் பற்றியெல்லாம் பேசி தீபிகாவின் கனவில் அவன் தீ மூட்டியபோதும், காலங்கள் மாறும், தனக்கு கணவனானபின் குமரன் காதல் நோய்க்கு ஆளாவான் என்றெண்ணி அவனைக் கைபிடித்தாள்.

மாங்கல்ய கயிற்றின் புது மஞ்சள் சாயம் மாற ஆரம்பித்திருந்தது. ஆனால், தீபிகாவின் எதிர்பார்ப்புகளும் குமரனும் தனித்தனியேதான் இருந்தனர். அவள் முகத்தின் முன் வந்து விழுந்த கற்றை முடியை அவன் தன் விரலால் ஒதுக்கிவிடவில்லை. அலுவலகம் முடிந்து வரும்போது, அவள் கண் பொத்தி விளையாட்டு காட்டியதில்லை. ஊரே உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் மூழ்கிக்கிடந்த இரவுகூட, காரல் மார்க்ஸின் பொருளாதாரக் கோட்பாடுகளை கரைத்துக் குடித்துக் கொண்டிருந்தான். அவள் ஆசை ஆசையாக சமைத்துப் போட்டதை, நியூஸ் சேனல்கள் பார்த்தபடியே மென்று விழுங்கினான்.

தீபிகாவுக்கு நித்தமும் ஏமாற்றமாகக் கழிந்தது. ஆக, இரவும் பகலும் உரசிக்கொள்ளும் அந்திப்பொழுதுகள் அவளுக்கு அர்த்தமற்றதாகத் தோன்றின. தான் நூறு சதவிகிதம் அவனைக் காதலிப்பதாகவும், ஆனால் ஒரு சதவிகிதம்கூட அது தனக்கு திரும்ப கிடைக்கவில்லை என்றும் ஒரு மாய எண்ணத்தை மனதுக்குள் மெள்ள வளர்த்தெடுத்தாள்.

ஒரு இரவு நேரத் தனிமை. 'தீபு' என்று கைபிடித்தான் குமரன். தீபு... இத்தனை நாட்களாக அவனிடமிருந்த அவள் எதிர்பார்த்துக் கிடந்த அந்த ஒற்றை வார்த்தை. ஆனால், அந்த சூழ்நிலையில் அதற்குக் கிடைக்கவேண்டிய அன்பும் அங்கீகாரமும் அஸ்தமித்துப் போயிருக்க, சட்டென அவன் கைகளை உதறியவளின் குரல் விசும்பலானது.

''போதும் உங்கள கட்டிக்கிட்டு நான் படற அவஸ்தை. காதல்னா என்னனு தெரியாத ஜென்மம். எத்தனை ஆசையோட, எதிர்பார்ப்போட இருந்தேன் தெரியுமா. எல்லாம் போச்சு...'

'என்னம்மா பிரச்னை.. இங்க வா..'' - எட்டி அமர்ந்திருந்தவளை இழுக்க முற்பட்டான்.

''ஒண்ணும் வேண்டாம்.. தேவைனா மட்டும் அன்பா பேசற மாதிரி நடிக்காதீங்க'' - சுருங்கிப் போனான் குமரன். அன்றிலிருந்து அவர்கள் பஞ்சணையில் காற்று வீசியது. காதல் கரைந்து கொண்டே போனது.

இருந்தாலும் நல்லவேளையாக அடுத்தடுத்த பிரளயங்கள் வெடிக்கவில்லை. சிறுவயதிலிருந்தே எதையும் நிதானமாக யோசித்து முடிவெடுப்பவன் என்பதால், பொறுமையாகவே இருந்தான். எங்கே நிகழ்ந்தது அந்த தவறு என்று அவனால் உணர முடிந்தது. விழுந்துகிடக்கும் மாயத் திரையை விலக்க நாள் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த அற்புத நாளும் வந்தது.

தன் அலுவலக பார்ட்டி ஒன்றுக்கு, மிகவும் வற்புறுத்தி தீபிகாவை அழைத்துப் போனான். திருமணத்துக்குப் பிறகு முதல் முதலாக பார்க்கிறார்கள் என்பதால், அவளே எதிர்பார்க்காத வகையில் ஏகப்பட்ட வரவேற்பு.

''நீங்க சமைச்ச காளான் மஞ்சூரியனையும் வெஜிடபிள் புலாவையும், 'என் வொய்ஃப் பண்ணினது.. சூப்பரா இருக்கும்.. சாப்பிட்டுப் பாருங்க..'னு ஆபீசுக்கே விருந்து வெச்சுடுவார் குமரன்'' - இது அக்கவுன்ட் செக்ஷன் கவிதா.

''பத்து வயசிலேயே டிராயிங் காம்படிஷன்ல கலெக்டர்கிட்ட பிரைஸ் வாங்கியிருக்கீங்களாமே.. இதுவரை நூறு தடவை சொல்லிட்டார் உங்க ஹஸ்பண்ட்..'' என்றார் பர்சனல் மேனேஜர்.

''நாங்க எல்லாம் லன்ச், டீ டைம்னு வெளிய போயிட்டா, ஐயா நைஸா அவரோட சிஸ்டம் ஸ்கிரீன் சேவரையேதான் பார்த்துட்டு இருப்பாரு. அட... உங்க போட்டோதாங்க அவனோட ஸ்கிரீன் சேவர்!'' - அவளை இன்னும் சிவக்க வைத்தான் குமரனின் நெருங்கிய தோழன் மூர்த்தி.

விருந்தோடு நடந்த விளையாட்டுப் போட்டியில், ஒவ்வொருவரும் தங்கள் மனைவிக்கு பிடித்த பத்து அம்சங்களை ஒரு பேப்பரில் எழுத வேண்டும். அத்தனையையும் சரியாக எழுதிய குமரனைப் பாராட்டிய கைதட்டல் ஓய வெகு நேரம் ஆயிற்று.

கண்களில் கண்ணீர் தழும்ப நின்றுகொண்டிருந்த தீபிகா கையில் மட்டும் சாட்டை கிடைத்திருந்தால், தன்னைத் தானே அடித்துக் கொண்டிருப்பாள்.

அலுவலகத்தில் அதுவரை 'ரிசர்வ்டு டைப்'ஆக அறியப்பட்டிருந்த குமரன் மைக் பிடிக்க, அனைவரும் அசந்து போய் பார்த்தார்கள்...

''கத்தி மூக்கில் காதல் நெஞ்சை காயம் செய்து மாயம் செய்தாளே..!
அவள் சிக்கெடுக்கும் கூந்தலுக்கு சீப்பாக இருப்பேன்
இல்லை... செந்தாமரை பாதத்தில் செருப்பாக பிறப்பேன்
அண்டமெல்லாம் விண்டுபோகும்... கொண்ட காதல் கொள்கை மாறாது...''

சபை என்றுகூட பார்க் காமல் வார்த்தைகள் முடியும் முன்னே ஓடிச்சென்று கணவனைக் கட்டிக் கொண்டாள் தீபிகா. 'ஹே' என கூட்டம் ஆர்ப்பரித்ததில் அவளின் அழுகைச் சத்தம் அடங்கிப் போக, ரகசியமாக அந்தக் கூர்நாசியை செல்லமாகக் கிள்ளினான் குமரன். இனி அவர்கள் பஞ்சணையில் காற்றும் உண்டு, காதலும் உண்டு!

சிலர் காதலை மௌன ராகமாக வாசிப்பார்கள். சிலர் கடை விரித்து கச்சேரி வைப்பார்கள். குமரன் இதில் முதல் வகை. தீபிகா இரண்டாம் வகை. இப்போது தீபிகாவுக்காக தன்னையும் 'இரண்டாம் வகை'யில் சேர்த்துக் கொண்டான் குமரன்.



திங்கள், 22 ஜூன், 2009

காமெடி பேட்டி



''இன்று பதவி என்னும் ஒரு பெரிய சுமையை தாங்கி கொண்டு உங்கள் முன்பு நிற்கிறேன். என்னால் முடிந்தவரை ஏழை எளிய மக்களுக்கு உதவுவேன். அவர்களுக்காக என் உயிரையும் தர தயராக இருக்கிறேன்.''
--மத்திய அமைச்சர் அழகிரி



அரசியல் கட்சி துவக்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இப்போது அது பற்றி நான் நினைக்கவில்லை. ஆனால் ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் எனக்கும் உடன்பாடு உள்ளது. ஆனால் எப்போது என்பது எனக்கு தெரியாது. என்னுடைய ரசிகர்கள் இப்போதே என்னுடைய தொண்டர்களாக மாறி விட்டனர்.

என்னுடைய இயக்கம் சார்பாக உள்ளூர் பிரச்சனைகளுக்காக நிச்சயமாக போராடுவார்கள் எனது இயக்கத்தினர். நானும் அதில் நிச்சயம் பங்கேற்பேன். வீதியில் இறங்கிப் போராடுவேன்.

-- நடிகர் விஜய்


மக்களே நல்லா பாத்துக்குங்க இவுங்கள இன்னுமா நம்புது நம்ப ஊரு?

ஞாயிறு, 21 ஜூன், 2009

அப்பாவின் சொத்து : சிறுகதை





தந்தையர் தின சிறப்பு சிறுகதை


ல்லுப்பட்டிக்கு புறப்பட வேண்டிய வண்டி, பேருந்து நிலையத்திலுருந்து நகர ஆரம்பித்தது. சிதம்பரம் அதை கவனித்து சற்றே பதற்றப்பட்டார். 4.50-க்கு தானே கிளம்ப வேண்டிய வண்டி; 4.15 தானே ஆகிறது. நேரத்தை மாற்றிவிட்டார்களா? சர்பத்தை மடக்மடகென்று வேகமாக குடித்துவிட்டு, சட்டைப் பையிலிருந்து பணத்தை எடுத்தார். பதற்றமாக ஐந்து ரூபாய் நோட்டை சர்பத் கடைக்காரரிடம் நீட்டினார். கடைக்காரர் மற்றொரு வாடிக்கையாளரிடம் பேசிக் கொண்டிருந்ததை பொருட்படுத்தாமல், "சீக்கிரம் பாக்கி கொடுப்பா" என்றார். கடைக்காரர் சிதம்பரத்தை பார்க்காமல் அந்த வாடிக்கையாளரிடம் பேசிக்கொண்டே பணத்தை வாங்கிக் கொண்டு தனது பணப்பெட்டியில் வைத்து ஒரு ரூபாய் காசை பாக்கி கொடுத்தார். சிதம்பரம் அதை வாங்கிக்கொண்டு விருவிருவென பேருந்தை நோக்கி நடந்தார்.

"என்னப்பா, 4.50-க்கு தானே வண்டி? இப்பவே எடுக்குற?" படிக்கட்டில் நின்றுகொண்டிருந்த நடுத்துனரைப் பார்த்து கேட்டார்.

"இல்லண்ணே. 2.30 மணி வண்டி அண்ணே. இப்பதான் எடுக்கிறோம்."

"என்னப்பா ஆச்சு?"

"அமராவதிபுதூர் நம்ம ஆனா மெனா வீடு கிட்ட திருப்பம் இருக்கிலண்ணே, அங்க ஆக்ஸிடண்டு ஆயிடுச்சண்ணே!""திரும்பி வரம்போதா, இல்லை போகும்போதாப்பா?"

"வரும்போதுதான் அண்ணே. போகும்போதுதான் பிரச்னை ஒண்ணுமில்லையேணே. லெவ்ட்தானே எடுக்கணும். வரும்போதுதான் அண்ணே, ஒரே கடையா வந்திருச்சண்ணே. அங்கிட்டுருந்து வர வண்டிங்க சரியா தெரியமாட்டேங்குதண்ணே."

"ரொம்ப நாளா அப்படித்தானே இருக்கு. என்னமோ புதுசா வந்த மாதிரி சொல்ற. உங்களுக்கெல்லாம் வரவர பொறுமையே இல்லையப்பா. விருட்டுனு தான் எல்லா இடத்திலையும் ஓட்டுறீங்க. சும்மா பழியை ரோடு மேலையும், மக்கள் மேலையும், அரசாங்கம் மேலையும் போடாதீங்கப்பா. நம்ம என்ன செய்தோம், எப்படி மாத்தி செய்யலாம்னு பாருங்கப்பா," எனச் சொல்லிக் கொண்டே பேருந்தில் ஏறி உட்கார்ந்தார் சிதம்பரம்.

"என்னப்பா, இந்த தடவை ஒழுங்கா கொண்டு போய் ஊர்ல சேத்துவிட்டுருவீங்கள?"

"பதினோரு வருஷமா இதே ரூட்டுதன் அண்ணே ஓட்டுறோம். ஒரு தடவைகூட இப்படி ஆனதில்லண்ணே. நாங்களும் அவ்வளவு பொறுமையாகதான் இருக்கிறோம். ஒரு நாளைக்கு எங்க வேலையை பாருங்கண்ணே. அப்பதான் தெரியும். எவன் ரூல்ஸை பாத்து போறான்? எல்லாம் என்னவோ அவன் வீட்டு ரோடு மாதிரி நினைச்ச இடத்தில நினைச்ச மாதிரிலாம் ஓட்டுறான். ஆக்ஸிடண்டு ஆனா தப்பு யாரு மேலனு எவனும் பாக்கலை. பெரிய வண்டி எதுவோ அதை போட்டு அடிக்கிறான்."

குறைகள் தான் குறைவாக இல்லாமல் எல்லா இடத்திலும் நிறைவாகவே உள்ளது. தினசரி வாழ்க்கையில் எத்தனை பேர் மீதும் எவ்வளவு குறைகள்? வீட்டில் குறைகள், சொந்தக்காரர்களிடம் குறைகள், வேலையில் குறைகள், நாட்டில் குறைகள். ஒரு வடையை எடுத்தால், நடுவில் இருக்கும் ஓட்டையவா பார்த்து கொண்டிருக்கிறோம்? வடையைதானே பார்த்து, கடித்து, ருசித்து சாப்பிடுகிறோம்? இந்த நாட்டிலும், வீட்டிலும் சுவையானதை ரசிக்காமல், ஓட்டையை வெறிச்சோடி பார்பவர்கள் தான் அதிகம். ஒரு காலத்தில் இந்த நடத்துனர் வேலை இவன் கனவாக இருந்திருக்கும். நினைவானவுடன் அதை ரசிக்காமல், அடுத்த கனவின் மேல் தான் கவனம். மனித இயல்பு.

சிதம்பரம் தன் மகளைப் பற்றி இந்த விஷயத்தில் ரொம்பவும் யோசித்தார். நடத்துனரை சொல்லி என்ன, தன் வீட்டில் பார்வதியும் அப்படித்தானே இருக்கிறாள். பாருவை நினைக்கையில் சிதம்பரம் ஒரு பெருமூச்சு விட்டார்.

பேருந்து கல்லுக்கட்டி கடைத்தெருவைத் தாண்டி டிசோட்டா பேக்கரி வழியாக அமராவதிப்பூதூரை நோக்கி சென்றுகொண்டிருந்தது. பேக்கரி வாசலில் அண்ணாமலை நின்று கொண்டிருந்தார். இதனால்தான் சொந்த மண்ணை விட்டு சிதம்பரத்தால் எங்கும் செல்ல விருப்பம் இல்லை. எங்கு பார்த்தாலும் தெரிந்த கடைகள், தெரிந்த மக்கள், தெரிந்த தெருக்கள், தெரிந்த வீடுகள். இது எல்லாம் எணக்கு தெரிந்தது, என்னுடையது போன்ற ஓர் உணர்வு. என்னதான் மதுரையில் பாரு வீடு இருந்தாலும், ஒரு பிடித்தம் வரவில்லை சிதம்பரத்துக்கு.

"அண்ணே இறங்கிக்கோங்க."

எந்த ஊரில் கிடைக்கும் இந்த மரியாதை? பேருந்து நிற்குமிடம் பெருமாள் கோயில் என்றாலும், சிதம்பரம் வீடு இருக்கும் தெரு வந்தவுடன் எப்பொழுதும் நடத்துனர் பேருந்தை நிறுத்த சொல்வார். அவருக்கு தெரியும், சிதம்பரம் வீடு இருக்குமிடம்.

"இல்லப்பா. கோயில் கிட்டையே இறங்கிக்கிறேன். அஞ்சு மணி தீபத்தை பாத்துட்டு அப்படியே வீட்டுக்குப்போறேன்."

தீபத்தை பார்த்து வீடு திரும்பியதும் சிதம்பரதுக்கு ஓர் அதிர்ச்சி. வீட்டு வாசலில் பாரு. ஒன்றும் புரியவில்லை. எப்பவும் ஒரு போன் போட்டில வருவா? என்ன திடுதிப்புனு?

"என்னமா பாரு? எப்ப வந்த? நீ வரது தெரியாதம்மா, தெரிஞ்சிருந்தா வீட்டிலையே..."

மேற்கொண்டு சிதம்பரம் பேசவில்லை. அவள் முகத்தில் இருக்கும் கோபமும், கண்களில் காட்டும் உணர்ச்சியும் புரிந்துவிட்டது. என்னமோ நடந்திருக்கு.

கதவை திறந்து உள்ளே சென்றதும், "வாம்மா வா. என்னமா, என்னாச்சு?"

"நீங்க இப்படி பண்ணுவீங்கனு எதிர்பாக்கலைப்பா"

சிதம்பரம் இதை எதிர்பார்த்ததுதான். இருந்தாலும் அவளாகவே அதை சொல்லட்டும் என்று, "எதைம்மா சொல்ற?" என கேட்டார்.

"நல்லதுக்கு காலமே இல்லப்பா. நல்லவளா இருந்து, ஒரு பிள்ளை செய்ய வேண்டியதையெல்லாம் நான் செஞ்சேன். என்னப்பா குறை என் மேல? சின்ன வயசிலிருந்தே அவ தாம்ப்பா உங்களுக்கு. கடைசில சொத்தையும் அவளுக்கே கொடுத்தீட்டீங்களேப்பா."

அழ ஆரம்பித்தாள் பாரு.

"கஷ்ட்டப்படுறாமா. அவளுக்குதான் அது அதிகமா உதவும்."

"கஷ்ட்டப்படுறானா? யாருனால கஷ்ட்டப்படுறா? அவ கஷ்ட்டத்துக்கு அவதான் காரணம். கல்யாணத்துக்கு முன்னாடி நீங்களும் ஒண்ணும் சொல்லமாட்டீங்க. அம்மாவும் ஒரே செல்லம். கிடந்து ஆடினா. போன இடத்தில அவ திமிற அடக்கிடாங்க."

பாருவுக்கு ஒரே தங்கை. சரசு. கடைக்குட்டி அம்மாவுக்கு செல்லக்குட்டி. சரசு பிறரை கேலி செய்தால் அது நகைச்சுவை. பதிலுக்கு பதில் பேசினால் அது சாமர்த்தியம். அவள் கோபப்பட்டால் நாம் தான் அவள் கோபப்படாதப்படி நடந்துக்கொள்ள வேண்டும். அவள் தப்பு செய்தால், பாவம் அவள் சின்ன பொண்ணு. அவள் அப்படித்தான் என்று கல்யாணத்துக்குமுன் ஏற்று கொண்டவளை கணவன் அவ்வாறு எற்றுக்கொள்ள மறுத்தான். அவள் மாறவேண்டும் என்று எதிர்பார்த்தான். அவளுக்கோ மாறி பழக்கமில்லை. தன்னை மாற்றினால் தன்னையே இழப்பதுப்போல ஒரு பயம். ஆண்டுகள் சென்றன. பிள்ளையும் பிறந்தது. பிள்ளை பிறந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று எல்லோரையும் போல் ஒரு நப்பாசை கணவனுக்கு. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? ஐந்தில் வளையாதது பிள்ளை பெற்றால் ஐம்பதில் வளையக்கூடும் என்று சொல்லவில்லையே?

தினம் தினம் கல்யாண வாழ்க்கை கசந்தது. சண்டை போடுவதற்க்கு மட்டும்தான் இருவரும் பேசிக்கொண்டார்கள். அம்மா உயிரோடு இருக்கும் வரை ஒரு சிரிய நூல் இழையில் சரசுவின் திருமணத்தை கோர்த்துவைத்திருந்தாள். அம்மா இறந்த பிறகு நூல் அறுந்தது. சரசு விவாகரத்துப் பெற்றாள். பத்தாண்டு காலம் கவலைக்கிடமாக இருந்ததால்தான் அம்மா இறந்தாள் என பாரு மட்டும் புலம்பினாள்.

சண்டையும் சச்சரவுமாக இருக்கும் சரசு வீட்டிற்கு சிதம்பரம் என்றும் சென்றதில்லை. பாரு வீடுதான் அவருக்கு வீடு மாதிரி. பாரு மகன் சோமு தான் பேரன். விவாகரத்துக்கு பிறகும் சரசுவை காண விரும்பவில்லை. சரசு உலகின் மீதும் வாழ்க்கையின் மீதும் இன்னும் கோபமாகவே இருந்தாள். வேலை எதுவும் என்றும் பார்ததில்லை. செலவுக்கு அப்பாவும் கணவனும் பணம் அனுப்புவார்கள். பாரு அதை பொருட்படுத்தவில்லை. ஆனால் அப்பா இப்ப எண்பது சதவீதம் அவளுக்கும், இருபது சதவீதம் இவளுக்கும் சொத்து பிரித்ததில் இடிந்து போனாள். அப்படி இருக்கிற அவளுக்கு எப்படி எல்லாம் நடக்குது? அப்ப நானும் ஆடணுமோ? பிடிவாதம் பிடிக்கணுமோ? அப்பா ஏமாத்திட்டாங்களே? நம்ம அப்பாவா? ஏன்? எதுக்கு? பணம் கூட வேண்டாம். ஆனா எனக்கு காரணம் தெரிஞ்சாகணும்.

"நீ நல்லவ. நல்லா இருக்கிற. நல்லா இருப்ப. மாப்பிள்ளை நல்லவுக. சோமுவும் நல்லா வருவான். உன்னை தொட்டு ஒரு கவலையும் இல்லமா. சந்தோஷம்தான் மா. உன் புருஷன் அளவுக்கு புத்திசாலியகவும் பொறுமசாலியாகவும் அவளுக்கு அமையல. இப்ப அவனும் கூட இல்லை. பிள்ளையோட தனியா இருக்கா. எங்கேயும் போறதில்லை. யாரோடையும் பேசறதில்லை. அவ எதிர்காலத்தை நினைச்சா பயமா இருக்குமா. சொத்தைகூட அவ பையன் பேர்லதான்மா எழுதினேன்."

"என்னமோ எனக்கு மட்டும் எல்லாம் வானத்திலிருந்து விழுந்தமாதிரி பேசுறீங்க. நான் அப்படி ஏற்படுத்திக்கிட்டேன். சந்தோஷம்ங்கிறது நமக்கு கிடைக்கறதை வைத்து இல்லை, கிடைத்ததை வைத்து நாம ஏற்படுத்திகறது. நான் நல்லா இருக்கிறதுல எனாக்கும் பங்கு உண்டுப்பா. அதான் அதை பாரட்டுற மாதிரிதான் நல்ல பரிசா கொடுத்துட்டீங்களே" - அழுதுக்கொண்டே பேசினாள் பாரு.

"சொத்தை சரிபாதி கொடுக்காததினால உன்னை பாராட்டுலைனு நினைக்காதம்மா."

"வேற எப்படிப்பா? நாம செய்றதை வைத்துதான் நம்ம எண்ணங்கள் என்னனு தெரியும். உங்க செயல்கள் தான்பா உங்க முக்கியத்துவங்களை காட்டுது. உங்க மனசில என்னோட முக்கியத்துவம் என்னனு நான் புருஞ்சுகிட்டேன். நான் வரேன்பா."
பாரு எழுந்து கதவை நோக்கி நடந்தாள்.

"எனக்கு நீங்க இரண்டு பேரும் நல்லாயிருக்கணும். நீ புருஞ்சுப்பேனு நினைச்சேன்."

"எப்பவும் நான்தானே புருஞ்சுக்கணும்."

திரும்பிப் பார்க்காமல் பாரு வெளியேறினாள்.

****

பாரு அப்பாவை பார்த்து ஆறு மாதம் ஆகிவிட்டது. இவ்வளவு நாட்கள் அப்பாவை பார்க்காமலும் பேசாமலும் இருந்ததில்லை. அவ்வப்பொழுது இரக்கம் வந்தாலும் கோபமும் அழுகையும் தனியவில்லை பாருவுக்கு. மனதுக்கு மாறுதலாக இருக்கட்டுமென்று மீனாட்சியம்மன் கோயிலுக்கு சென்றாள்.

"நல்லாயிருக்கியாமா?"

திரும்பிப் பார்த்தால் அண்ணாமலை அண்ணன்.

"அண்ணே! நல்லாயிருக்கேன் அண்ணே. நீங்க எப்டியண்ணே இருக்கீங்க?"

"எனக்கென்னமா. சந்தோஷமா மகன் வீட்டுல இருக்கிறேன். ஊருக்கு போறேன்டானா விடமாட்டேங்கிறான். உங்க அப்பா மாதிரி எனக்கும் ஊர்தான்மா பிடிக்கும்."

"உனக்கு தெரியுமா? நம்ம சோமு காலெஜிலதான்மா என் பேரனும் படிக்கிறான். நேத்தைக்கு வீட்டுக்கு வந்திருந்தான் அவனைப் பாக்க. நான் யாருனு அவனுக்கு தெரியாது. அவனுக்கு அப்புறம் எடுத்து சொன்னேன் எப்படி சொந்தம்னு"

"சொன்னான் அண்ணே. எல்லாரையும் கூட்டிட்டு வீட்டுக்கு வாங்க. நாங்க அண்ணாநகர்லதான் இருக்கோம்."

"நீ கூப்பிடறது லேட் மா. சோமு விலாசமெல்லாம் கொடுத்து எங்களை அப்படி கூப்புட்டான்மா. நல்ல பையன்மா உன் பையன். அப்படி ஒரு மரியாதை தெரிஞ்ச பையன். நல்ல குணம். நல்லா பேசி பழகுறான். அப்படியே உங்கப்பாக்கிட்ட பேசிக்கிட்டு இருக்கிற மாதிரி இருந்திச்சு. உங்கப்பாவுக்கு பையன் இல்லை. சோமுவைதான் பையன் மாதிரி நினைச்சாரு. லீவுல எல்லாம் அவனோடே இருந்ததுல, சோமு உன் அப்பாவை கவனிச்சு பாத்திருக்கான். சரசு வீட்டு பிரச்னைனாலே எல்லா கவனமும் நேரமும் சோமுவுக்கே கொடுத்திருக்காரு. சிதம்பரம் அண்ணன்கிட்ட காசு பணம் பெரிசா இல்லைனாலும், அவுககிட்ட இருக்கிற பெரிய சொத்தே அவரோட எண்ணங்களும், பேச்சும், குணமும், பழக்கவழக்கங்களும்தான்மா. எங்க எல்லாத்தையும் அவரோடவே கொண்டுபோய்டுவாரோனு நான் நினைச்சதுண்டு. நல்ல வேளை அத்தனையும் அப்படியே உன் பையன்கிட்ட கொடுத்திருக்காரு."

பாருவுக்கு அப்பாவை பார்க்க வேண்டும் போல் இருந்தது.

--இளங்கோ மெய்யப்பன்

வெள்ளி, 19 ஜூன், 2009

பிறந்த நாள் வாழ்த்துக்கள்



பல வருடங்களுக்குப் பிறகு, நான் உனது பிறந்த நாளை ஞாபகம் வைத்திருந்து வாழ்த்துகிறேன், வாழ்த்தப் போகிறேன்.
இனிய நட்பு என்றுமே தோற்பதில்லை. நட்பு சாகா வரம் பெற்றது.

உங்களுக்கு எல்லாம் யாராக இருப்பது பெருமையா இருக்குன்னு கேட்டா என்ன சொல்விங்க!
அம்மா, அப்பாக்கு மகனாக, காதலிக்கு காதலனாக எப்படி எத்தனையோ ?
ஆனால் உனக்கு நண்பன் என்பதில் பெருமைபடுகிறேன்!!!

எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டுகிறேன்

Dubai Metro rail







இதோ உச்சக்கட்டமாக பணிகள் முழுவீச்சாக நடைபெறுகிறது துபாய் மெட்ரோ.காரணம் ஒன்றுமில்லை 09/09/09 அன்று திறந்து வைக்கப்படுகிறது.ஆனால் இதுவரையிலும் பயணகட்டணம் பற்றி வாய் திறக்கவில்லை துபாய் அரசு.
பொறுத்திருந்து பார்க்கலாம் ,இன்னும் எண்பது நாட்கள் மட்டுமே!!!!

காமெடி


பாப்பா, லைசென்ஸ் இருக்கா...? எட்டு போடத் தெரியுமா...?




ஏழரை வேணா போட்டுக் காட்டவா சார்...!!










ஏதோ ஆற்காட்டார் புண்ணியத்துல, எந்த பயமும் இல்லாம ரெண்டு மூணு வருஷமா இங்கே கூடு கட்டிக் குடும்பம் நடத்திக்கிட்டிருக்கேன்...!



வியாழன், 18 ஜூன், 2009

நட்பு காலம்







-கவிஞர் அறிவுமதி


கண் பார்த்துப் பேசினாலே கடலை , காதல் எனத் தூற்றித்திரியும் உலகத்தில் நட்பின் உண்மையை ‘நச்’ எனச் சொல்லியுள்ளீர்.

எனதுயிர் தோழி வினிதா க்கு சமர்பிக்கிறேன்

சிறிது வெளிச்சம்



ராத்தியில் புகழ்பெற்ற எழுத்தாளரான மிருணாள் பாண்டே 'பெட்டை நாய்' என்று ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். கதை மும்பையில் உள்ள அடுக்கு மாடி வீடு ஒன்றில் துவங்குகிறது. தனது பிள்ளைகளை அமெரிக்கா அனுப்பிவிட்டு, தாத்தாவும் பாட்டியும் மட்டும் அடுக்குமாடிக் குடியிருப்பில் வாழ்கிறார்கள். உதவிக்கு ஒரு வேலைக்காரப் பெண் இருக்கிறாள்.

தாத்தாவும் பாட்டியும் நாள் முழுவதும் டி.வி.பார்ப் பார்கள். ஆங்கில தினசரியை வரி விடாமல் படிப்பார்கள். அவ்வப்போது அமெரிக்காவில் வாழும் பிள்ளைகளுடன் போனில் பேசுவார்கள். ஒருநாள் வேலைக் காரம்மா வீட்டைத் துடைத்துக்கொண்டு இருக்கும் போது, தாத்தா அன்றைய செய்தித்தாளில் வந்துள்ள ஒரு செய்தியைப் பற்றி அவளிடம் விசாரிக்கிறார்.


அதாவது, அந்த வேலைக்காரம்மா வசிக்கும் சேரிப்பகுதியில் ஒரு நாய்க்கும் 12 வயது சிறுமிக்கும் திருமணம் செய்துவைக்கப்பட்டு இருக்கிறது என்று புகைப்படத்துடன் செய்தி வெளியாகி உள்ளது. இது என்னமுட்டாள்தனம் என்று புரியாமல், 'உனக்கு இந்தத் திருமணம் பற்றித் தெரியுமா?' என்று தாத்தா கேட்கிறார்.'நான் போயிருந்தேன். நல்ல கூட்டம்' என்றபடியே வேலை செய்கிறாள் அவள்.

தாத்தாவுக்கு ஆத்திரம். முட்டாள்ஜனங் களாக இருக்கிறார்களே என்று. '12 வயது சிறுமிக்குத் திருமணம் செய்வது சட்டப்படிதவறு. உங்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க முடியும். தெரியுமா?' என்கிறார். உடனே வேலைக்காரம்மா, 'மனிதர்களுடன் கல்யாணம் செய்வதற்குத்தான் வயதுக் கட்டுப்பாடு உள்ளது. நாய்களுடன் திருமணம் செய்வதற்கு இல்லை. ஒருவேளை காவல்துறை விசாரிக்க நினைத்தால், நாயை எப்படி விசாரிப்பார்கள்?' என்று கேலியாகக் கேட்கிறாள்.

'படிப்பறிவு இல்லாதவர்கள் என்பதால்தான் இப் படி நடந்துகொள்கிறீர்கள்' என்று கத்துகிறார் தாத்தா. 'இதில் என்ன தவறு இருக்கிறது?' என்று இயல்பாகக் கேட்கிறாள். தாத்தா, 'இதை எதிர்த்து நான் பொதுநல வழக்கு தொடரப்போகிறேன்' என்கிறார். எதற்காக இந்தக் கிழவர் இவ்வளவு ஆவேசப்படுகிறார் என்று அந்த வேலைக்காரம்மா நினைக்கிறாள்.

ஒரு பொண்ணுக்கு நாயைக் கல்யாணம் பண்ணி வைப்பதால் நிறைய நன்மைகள் இருக்கின்றன. ஒன்று, அந்த நாய் ஒருபோதும் குடித்துவிட்டு வந்து அவளைப் போட்டு அடிக்காது. மற்றது, அந்த நாய் போட்டதைச் சாப்பிட்டுப் படுத்துக் கிடக்கும். 'அதைச் சமைத்துத் தா... இதைச் சமைத்துத் தா' என்று இம்சை பண்ணாது. கார், பைக், தங்கச் சங்கிலி என்று வரதட்சணை எதுவும் கேட்காது.

சராசரி ஆம்பளை போல திருமணமான சில நாட்களுக்கு 'கண்ணே மணியே' என்று கொஞ்சிக் குலாவி, அடுத்த வாரத்தில் 'தண்டம், முட்டாள், தடிமாடு' என்று திட்டாது. என்றைக்கும் நன்றியோடு வாலை ஆட்டிக்கொண்டு இருக்கும். இவை யாவையும் விட ராத்திரி ஆனதும் 'என்னுடன் படுத்துக்கொள்!' என்று அவளது உடல் சிரமங்களைப் பற்றிக் கவலைப்படாமல், தன் இச்சைக்கு அவளை வற்புறுத்தாது. இதைவிட வேறு நல்ல புருஷன் யார் கிடைப்பார்கள் என்று தன் வேலையைத் தொடர்ந் தாள் வேலைக்காரம்மா என்று அந்தக் கதை முடிகிறது.

இந்தியச் சமூகம் பெண்ணைத் தாயாக, தெய்வமாக, மகாசக்தியாக வழி பட்டது என்ற புனித பிம்பங்களின் மீது சாட்டை அடி போல விழுகிறது இந்தக் கதை. வாசிக்கும் ஒவ்வொரு ஆணின் மீதும் இந்த சவுக்கடி விழுகிறது. இப்படிப் பெண்களை நடத்தும் ஒரு சமூகத்தில் ஆணாக இருப்பதன் குற்ற உணர்வு பீறிடுகிறது. மிருணாள் பாண்டேயின் கதை... திருமணம் என்ற பெயரில் பெண்கள் காலங்காலமாக அடைந்துவரும் காயங்கள், வலிகளைக் குரலை உயர்த் தாமல் முகத்தில் அறைவது போலச் சொல்கிறது.

இந்தக் கதை வெறும் கற்பனை அல்ல; நம்மைச் சுற்றி நடக்கும் அன்றாட நிகழ் வுகள் இந்தக் கதையை நிஜம் என்று உறுதிப்படுத்துகின்றன.

கிராமங்களில் மழை இல்லாத நாட்களில் தவளைகளுக்குத் திருமணம்செய்து வைப்பதுண்டு. கழுதைக் கல்யாணம் நடப்பதைக்கூடஅருகில் இருந்து பார்த்து இருக்கிறேன். அவை கிராமத்துச் சடங்கு கள் என்று நம்பப்படுகின்றன. ஆனால், நாயைத் திருமணம்செய்த மனிதரையும், ஐந்து வயதுச் சிறுமியை ஒரு நாய்க்குத் திருமணம் செய்துவைத்தார்கள் என்ற செய்தியையும் நாளிதழில் வாசித்தபோது அடைந்த திகைப்பும் குழப்பமும் இன்று வரை பிடிபடாமலேதான் உள்ளது.

ஜாம்ஷெட்பூரில் சோனி என்ற மாணவிக்கு ஒரே ஒரு எத்துப்பல் முளைத்திருக்கிறது. இந்தப் பல் பெரிதாக வளரவே அவளது பெற்றோர், பெண்களுக்கு நீண்ட எத்துப் பல் முளைப்பது துரதிருஷ்டம். அது அசுரத்தனத்தின்அடையாளம். ரத்தக்காட்டேரியாக பெண் மாறி விடுவாள். ஆகவே, அவளை ஒரு நாய்க்குத் திருமணம் செய்துவைத்து, அந்தப் பல்லைப் பிடுங்கி எடுத்துவிட வேண்டும் என்று முடிவு செய்து, ஊர் கூடி விருந்துவைத்து அவளை நாய்க்குத் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். இந்தக் கல்யாணத்தில் மக்கள் கலந்துகொண்டு, விருந்து சாப்பிட்டுவிட்டு, வாழ்த்தியும் சென்றுள்ளார்கள்.

இதன் மறுபக்கம் போல, செல்வகுமார் என்ற இளைஞன், பாலுறவுகொண்டு இருந்த நாய்களைத் தன் சின்ன வயதில் கல்லைவிட்டு எறிந்து காயப்படுத்தியதில் ஒரு நாய் செத்துப் போய்விட்டது... அந்தக் காரணத் தால்தான் தனது காது செவிடாகிவிட்டது என்று நம்பி, சாபத்திலிருந்து மீண்டு வர நாயைத் திரு மணம் செய்துகொண்டிருக்கிறார். பகுத்தறிவும் படிப்பறிவும் மேம்பட்டது என்று நாம் பெருமை யாகச் சொல்லிக்கொள்ளும் தமிழ்நாட்டில் தான் இந்த விசித்திரத் திருமணம் நடைபெற்று இருக்கிறது.

இதைவிடப் பெரிய அபத்த நாடகம் சென்ற ஆண்டு டெல்லியில் நடைபெற்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட 100 நாய்களுக்கு ஒரே இடத்தில் திருமணங்கள் செய்துவைக்கப்பட்டன. அந்தத் திரு மணத்தை நடத்தியவர் நாய் வளர்ப்பதில் பிரசித்தி பெற்ற ஒரு பணக்காரர். அவருக்குத் தனது நாய்களுக்குப் பொருத்தமான துணையைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற விருப்பம் உருவானது. அதை நிறைவேற்றிக்கொள்ள, தனக்குத் தெரிந்தவர்களிடம் உள்ள நாய்களை எல்லாம் தேர்வுசெய்து அரேஞ்ச்டு மேரேஜ் செய்துவைத்திருக்கிறார்.

நாய்கள்கூட தங்கள் விருப்பம் போலத் தங்களதுதுணை களைத் தேடிக்கொள்வதை நாம் அனுமதிக்க மாட்டோம் என்பதைத்தான் இந்த நிகழ்வு வெளிக்காட்டுகிறதா? இவை வேடிக்கைச் சடங்குகள் அல்ல; மாறாக, நாம் எவ்வளவு பழைமையில், அர்த்தமற்ற மூடத்தனத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம் என்பதையே வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

திருமணம் என்ற நூற்றாண்டு கால நடைமுறை பால் உறவுக்கான துணை சேர்க்க மட்டும்தானா? திருமண முறிவுகளுக்கு ஆண் மட்டுமே காரணம் இல்லை; பெண் களும் காரணமாக இருக்கக்கூடும். பெரும்பான்மை திருமணங்கள் வணிக ஒப்பந்தங்கள் போலவே நடக்கின்றன. உறவைவிடப் பணம் பிரதானமாகிவிட்டது.

எளிய மனிதர்களின் திருமணங்களில் சிறு சண்டைகள் சச்சரவுகள் வந்தபோதும் குடும்பம் பிரிவது இல்லை. ஆனால், வசதியான திருமணங்கள் எளிய காரணம்கூட இல்லாமல் பிரிந்துவிடுகின்றன என்பதே நிஜம்.

எல்லாத் திருமணங்களும் சந்தோஷமாகவே தன் வாழ்க்கைப் பயணத்தைத் துவக்குகின்றன. ஆனால், இன்று உள்ள விவாகரத்து வழக்குகளைக் காணும்போது பெரும்பான்மையான பயணங்கள் துவங்கிய இடத்திலேயே முறிந்துவிடுவதை அறியமுடிகிறது. முக்கியக் காரணம், புரிந்துகொள்ளுதல், விட்டுக்கொடுத்தல், அன்பைப் பகிர்ந்துகொள்ளுதல் என இந்த மூன்றும் இல்லாத சூழல்.

பெண்களுக்குத் திருமணம் ஏற்படுத்தும் மௌனம் புரிந்துகொள்ளப்பட முடியாதது. அது ஒரு நீரூற்றைப் போல அவளுக்குள் கடந்த காலத்தின் நினைவுகளைப் பீறிட்டுக்கொண்டே இருக்கிறது. 'அமைதி எப்போதும் புன்னகையில்தான் வேர்விட்டு இருக் கும்' என்பார்கள். ஆனால், இன்று திருமணம் ஆனதும் பெண்களிடம் இருந்து, இயல்பான சிரிப்பு மறைந்துபோகத் துவங்குகிறது. அக நெருக்கடி முகத்தில் உறைந்துவிடுகிறது. சிரிப்பதற்குக் காரணம் தேவைப்படுகிறது என்பதே நமது அக வீழ்ச்சியின் அடையாளம்தானே!

சிரிப்பை மறந்த பெண்களை எனது பயணங்களில், ரயிலில், பேருந்தில், சாலை ஓரங்களில், அலுவலகங்களில் காண்கிறேன். தன்னை மீறி அவர்கள் சிரிக்கும் தருணங்கள் அரிதானவை. ஏதேதோ யோசனைகள், கவலைகள், விளக்க முடியாத திகைப்பு போன்றவை படிந்த பெண் முகங்களையே பொதுவெளியில் அதிகம் காண முடிகிறது. காலில் அப்பிய ஈரக் களிமண்ணைப் போல, மன வேதனைகளோடுதான் பெண் தன் வாழ்வினை முன்னெடுத்துப் போகிறாள்.

அப்படி ஒரு பெண்ணைப் பற்றியே 'தி கலர் பர்ப்பிள்' என்ற ஹாலிவுட் திரைப்படம் விவரிக் கிறது. மிக அற்புதமான படம். பத்துக்கும் மேற்பட்ட முறை அதைப் பார்த்திருக்கிறேன். ஆலீஸ் வாக்கரின் நாவலை ஸ்பீல்பெர்க் படமாக்கி உள்ளார். சுறா மீன்களையும், வேற்றுக்கிரகவாசிகளையும்,டைனோ சர்களையும் கொண்ட சாகசப் படங்களை இயக்கி, பெரும் வெற்றிபெற்ற ஸ்பீல்பெர்க்கூட சினிமா வெறும் வணிகம் மட்டுமில்லை என்பதை உணர்ந்து இயக்கிய இரண்டு படங்களில் ஒன்றுதான் 'The Color Purple'; மற்றது 'Schindler's List'.

'தி கலர் பர்ப்பிள்' படத்தில், சிலி ஜான்சன் என்ற முக்கிய வேடத்தில் வூப்பி கோல்ட்பெர்க் நடித் திருக்கிறார். 1900-களின் துவக்கத்தில் அமெரிக்காவில் வாழும் கறுப்பினப் பெண்ணின் வாழ்வை விவரிக்கும் இந்தப் படம், ஒரு பெண்ணின் 30 ஆண்டுக் காலக் குடும் பப் போராட்டத்தை மிக உண்மையாக விவரிக்கிறது.

தனது 14-வது வயதில் கர்ப்பிணி ஆகிறாள் சிலி. அதற்குக் காரணம் அவளது அப்பா. வளர்ப்புத் தந்தையே மகளைக் கெடுத்துக் கர்ப்பிணி ஆக்கிவிடுகிறார். அவ ளுக்கு என்ன செய்வது, யாரிடம்சொல்லி அழுவது என்று புரியவில்லை. குழந்தையைப் பெற்று எடுக்கிறாள். அதை அவளது அப்பா பிடுங்கிச் சென்றுவிடுகிறார். இந்த விஷயம் பற்றி யாரிடமும் அவள் சொல்லக்கூடாது என்று மிரட்டி, மனைவியை இழந்த ஆல்பர்ட் ஜான்சன் என்பவருக்கு சிலியைத் திருமணம் முடித்துவைக்கிறார்.

ஜான்சன் அவளை ஓர் அடிமை போல நடத்துகிறான். அவனுக்குச் சிலியின் தங்கை நட்டி மீது கண். ஒவ்வொரு நாளும் குடிவெறி அதிகமாகி அவன் சிலியை பாலியல் வன்புணர்ச்சிகொள்கிறான். நட்டி அக்காவின் கஷ்டங்களைக்கண்டு அவளுக்கு உதவி செய்யமுயற்சிக்கிறாள். படிக்கக் கற்றுத் தருகிறாள்.ஆனால், அந்தக் குடும்பத்தின் வீழ்ச்சியை அவளால் தடுக்க இயலவில்லை.

இந்த நிலையில் ஜான்சன் பாடகியான தன் பழைய காதலியை அந்த வீட்டுக்கு அழைத்துவருகிறான். அந்தப் பெண்ணுக்கும் சிலிக்கும் இடையே ஒரு பெயர் இல்லாத உறவு ஏற்படுகிறது. பரஸ்பரம் இருவரும்ஒடுக்கப்பட்ட பெண்கள் என்பதைப் புரிந்துகொள்கிறார்கள்.

நட்டி குடும்பத்தைப் பிரிந்து, கிறிஸ்துவ மிஷினரி களோடு போகிறாள். அவளது கடிதம் மட்டுமே ஆறுதல் தருவதாக உள்ளது. இதற்கு இடையில் சிலியின் பிள்ளைகள் அவளிடம் இருந்து பிரிக்கப்படுகிறார்கள். கணவன் அவளை வன்கொடுமைப்படுத்துகிறான். அவள் துயரத்தை மட்டுமே வாழ்வாகக் கொள்கிறாள். முடிவில் சிலியிடம் தான் மிக மோசமான மனிதனாக நடந்திருக்கிறோம் என்று உணர்ந்த ஜான்சன், தன் சேமிப்புப் பணம் முழுவதையும் செலவழித்து, அவளின் பிரிந்துபோன குழந்தைகளையும் தங்கையையும் அவளோடு ஒன்றுசேர்க்கிறான். படம் முழுவதும் சிலி ஒரு விலங் கைப் போலவே நடத்தப்படுகிறாள். ஒரு பெண் வெறி பிடித்த நாயைத் திருமணம் செய்துகொண்டு இருப்பது போலத்தான் இருக்கிறது.

பனியில் வாழும் பென்குவின் தன் இணையைத் தேர்வு செய்வதற்குக் காதலுடன் தேடுகிறது; கண்டு கொள்கிறது. தேடிச் சேர்ந்த பிறகு ஒருபோதும் வேறு ஒரு பென்குவினை நாடுவதே இல்லை. சில வேளைகளில் பெண் துணை இறந்துவிட்டால் பென்குவின்அந்தஏக்கத் துடன் அதே இடத்தைச் சுற்றிச் சுற்றி வருகிறது. வேறு எந்தப் பென்குவினையும் திரும்பிக்கூடப் பார்க்க மறுக்கிறது.

இணை சேரும் மிருகங்கள்கூடத் தங்களுக்குள்விளக்க முடியாத அன்புடன் இருக்கின்றன. படித்த, நவநாகரிகம் கொண்ட மனிதன் மட்டுமே திருமண விஷயத்தில் வால் இல்லாத நாயை நினைவுபடுத்துகிறான். அதுதான் கவலை தருகிறது!


எஸ்.ராமகிருஷ்ணன்