வியாழன், 18 ஜூன், 2009

சிறிது வெளிச்சம்



ராத்தியில் புகழ்பெற்ற எழுத்தாளரான மிருணாள் பாண்டே 'பெட்டை நாய்' என்று ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். கதை மும்பையில் உள்ள அடுக்கு மாடி வீடு ஒன்றில் துவங்குகிறது. தனது பிள்ளைகளை அமெரிக்கா அனுப்பிவிட்டு, தாத்தாவும் பாட்டியும் மட்டும் அடுக்குமாடிக் குடியிருப்பில் வாழ்கிறார்கள். உதவிக்கு ஒரு வேலைக்காரப் பெண் இருக்கிறாள்.

தாத்தாவும் பாட்டியும் நாள் முழுவதும் டி.வி.பார்ப் பார்கள். ஆங்கில தினசரியை வரி விடாமல் படிப்பார்கள். அவ்வப்போது அமெரிக்காவில் வாழும் பிள்ளைகளுடன் போனில் பேசுவார்கள். ஒருநாள் வேலைக் காரம்மா வீட்டைத் துடைத்துக்கொண்டு இருக்கும் போது, தாத்தா அன்றைய செய்தித்தாளில் வந்துள்ள ஒரு செய்தியைப் பற்றி அவளிடம் விசாரிக்கிறார்.


அதாவது, அந்த வேலைக்காரம்மா வசிக்கும் சேரிப்பகுதியில் ஒரு நாய்க்கும் 12 வயது சிறுமிக்கும் திருமணம் செய்துவைக்கப்பட்டு இருக்கிறது என்று புகைப்படத்துடன் செய்தி வெளியாகி உள்ளது. இது என்னமுட்டாள்தனம் என்று புரியாமல், 'உனக்கு இந்தத் திருமணம் பற்றித் தெரியுமா?' என்று தாத்தா கேட்கிறார்.'நான் போயிருந்தேன். நல்ல கூட்டம்' என்றபடியே வேலை செய்கிறாள் அவள்.

தாத்தாவுக்கு ஆத்திரம். முட்டாள்ஜனங் களாக இருக்கிறார்களே என்று. '12 வயது சிறுமிக்குத் திருமணம் செய்வது சட்டப்படிதவறு. உங்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க முடியும். தெரியுமா?' என்கிறார். உடனே வேலைக்காரம்மா, 'மனிதர்களுடன் கல்யாணம் செய்வதற்குத்தான் வயதுக் கட்டுப்பாடு உள்ளது. நாய்களுடன் திருமணம் செய்வதற்கு இல்லை. ஒருவேளை காவல்துறை விசாரிக்க நினைத்தால், நாயை எப்படி விசாரிப்பார்கள்?' என்று கேலியாகக் கேட்கிறாள்.

'படிப்பறிவு இல்லாதவர்கள் என்பதால்தான் இப் படி நடந்துகொள்கிறீர்கள்' என்று கத்துகிறார் தாத்தா. 'இதில் என்ன தவறு இருக்கிறது?' என்று இயல்பாகக் கேட்கிறாள். தாத்தா, 'இதை எதிர்த்து நான் பொதுநல வழக்கு தொடரப்போகிறேன்' என்கிறார். எதற்காக இந்தக் கிழவர் இவ்வளவு ஆவேசப்படுகிறார் என்று அந்த வேலைக்காரம்மா நினைக்கிறாள்.

ஒரு பொண்ணுக்கு நாயைக் கல்யாணம் பண்ணி வைப்பதால் நிறைய நன்மைகள் இருக்கின்றன. ஒன்று, அந்த நாய் ஒருபோதும் குடித்துவிட்டு வந்து அவளைப் போட்டு அடிக்காது. மற்றது, அந்த நாய் போட்டதைச் சாப்பிட்டுப் படுத்துக் கிடக்கும். 'அதைச் சமைத்துத் தா... இதைச் சமைத்துத் தா' என்று இம்சை பண்ணாது. கார், பைக், தங்கச் சங்கிலி என்று வரதட்சணை எதுவும் கேட்காது.

சராசரி ஆம்பளை போல திருமணமான சில நாட்களுக்கு 'கண்ணே மணியே' என்று கொஞ்சிக் குலாவி, அடுத்த வாரத்தில் 'தண்டம், முட்டாள், தடிமாடு' என்று திட்டாது. என்றைக்கும் நன்றியோடு வாலை ஆட்டிக்கொண்டு இருக்கும். இவை யாவையும் விட ராத்திரி ஆனதும் 'என்னுடன் படுத்துக்கொள்!' என்று அவளது உடல் சிரமங்களைப் பற்றிக் கவலைப்படாமல், தன் இச்சைக்கு அவளை வற்புறுத்தாது. இதைவிட வேறு நல்ல புருஷன் யார் கிடைப்பார்கள் என்று தன் வேலையைத் தொடர்ந் தாள் வேலைக்காரம்மா என்று அந்தக் கதை முடிகிறது.

இந்தியச் சமூகம் பெண்ணைத் தாயாக, தெய்வமாக, மகாசக்தியாக வழி பட்டது என்ற புனித பிம்பங்களின் மீது சாட்டை அடி போல விழுகிறது இந்தக் கதை. வாசிக்கும் ஒவ்வொரு ஆணின் மீதும் இந்த சவுக்கடி விழுகிறது. இப்படிப் பெண்களை நடத்தும் ஒரு சமூகத்தில் ஆணாக இருப்பதன் குற்ற உணர்வு பீறிடுகிறது. மிருணாள் பாண்டேயின் கதை... திருமணம் என்ற பெயரில் பெண்கள் காலங்காலமாக அடைந்துவரும் காயங்கள், வலிகளைக் குரலை உயர்த் தாமல் முகத்தில் அறைவது போலச் சொல்கிறது.

இந்தக் கதை வெறும் கற்பனை அல்ல; நம்மைச் சுற்றி நடக்கும் அன்றாட நிகழ் வுகள் இந்தக் கதையை நிஜம் என்று உறுதிப்படுத்துகின்றன.

கிராமங்களில் மழை இல்லாத நாட்களில் தவளைகளுக்குத் திருமணம்செய்து வைப்பதுண்டு. கழுதைக் கல்யாணம் நடப்பதைக்கூடஅருகில் இருந்து பார்த்து இருக்கிறேன். அவை கிராமத்துச் சடங்கு கள் என்று நம்பப்படுகின்றன. ஆனால், நாயைத் திருமணம்செய்த மனிதரையும், ஐந்து வயதுச் சிறுமியை ஒரு நாய்க்குத் திருமணம் செய்துவைத்தார்கள் என்ற செய்தியையும் நாளிதழில் வாசித்தபோது அடைந்த திகைப்பும் குழப்பமும் இன்று வரை பிடிபடாமலேதான் உள்ளது.

ஜாம்ஷெட்பூரில் சோனி என்ற மாணவிக்கு ஒரே ஒரு எத்துப்பல் முளைத்திருக்கிறது. இந்தப் பல் பெரிதாக வளரவே அவளது பெற்றோர், பெண்களுக்கு நீண்ட எத்துப் பல் முளைப்பது துரதிருஷ்டம். அது அசுரத்தனத்தின்அடையாளம். ரத்தக்காட்டேரியாக பெண் மாறி விடுவாள். ஆகவே, அவளை ஒரு நாய்க்குத் திருமணம் செய்துவைத்து, அந்தப் பல்லைப் பிடுங்கி எடுத்துவிட வேண்டும் என்று முடிவு செய்து, ஊர் கூடி விருந்துவைத்து அவளை நாய்க்குத் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். இந்தக் கல்யாணத்தில் மக்கள் கலந்துகொண்டு, விருந்து சாப்பிட்டுவிட்டு, வாழ்த்தியும் சென்றுள்ளார்கள்.

இதன் மறுபக்கம் போல, செல்வகுமார் என்ற இளைஞன், பாலுறவுகொண்டு இருந்த நாய்களைத் தன் சின்ன வயதில் கல்லைவிட்டு எறிந்து காயப்படுத்தியதில் ஒரு நாய் செத்துப் போய்விட்டது... அந்தக் காரணத் தால்தான் தனது காது செவிடாகிவிட்டது என்று நம்பி, சாபத்திலிருந்து மீண்டு வர நாயைத் திரு மணம் செய்துகொண்டிருக்கிறார். பகுத்தறிவும் படிப்பறிவும் மேம்பட்டது என்று நாம் பெருமை யாகச் சொல்லிக்கொள்ளும் தமிழ்நாட்டில் தான் இந்த விசித்திரத் திருமணம் நடைபெற்று இருக்கிறது.

இதைவிடப் பெரிய அபத்த நாடகம் சென்ற ஆண்டு டெல்லியில் நடைபெற்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட 100 நாய்களுக்கு ஒரே இடத்தில் திருமணங்கள் செய்துவைக்கப்பட்டன. அந்தத் திரு மணத்தை நடத்தியவர் நாய் வளர்ப்பதில் பிரசித்தி பெற்ற ஒரு பணக்காரர். அவருக்குத் தனது நாய்களுக்குப் பொருத்தமான துணையைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற விருப்பம் உருவானது. அதை நிறைவேற்றிக்கொள்ள, தனக்குத் தெரிந்தவர்களிடம் உள்ள நாய்களை எல்லாம் தேர்வுசெய்து அரேஞ்ச்டு மேரேஜ் செய்துவைத்திருக்கிறார்.

நாய்கள்கூட தங்கள் விருப்பம் போலத் தங்களதுதுணை களைத் தேடிக்கொள்வதை நாம் அனுமதிக்க மாட்டோம் என்பதைத்தான் இந்த நிகழ்வு வெளிக்காட்டுகிறதா? இவை வேடிக்கைச் சடங்குகள் அல்ல; மாறாக, நாம் எவ்வளவு பழைமையில், அர்த்தமற்ற மூடத்தனத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம் என்பதையே வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

திருமணம் என்ற நூற்றாண்டு கால நடைமுறை பால் உறவுக்கான துணை சேர்க்க மட்டும்தானா? திருமண முறிவுகளுக்கு ஆண் மட்டுமே காரணம் இல்லை; பெண் களும் காரணமாக இருக்கக்கூடும். பெரும்பான்மை திருமணங்கள் வணிக ஒப்பந்தங்கள் போலவே நடக்கின்றன. உறவைவிடப் பணம் பிரதானமாகிவிட்டது.

எளிய மனிதர்களின் திருமணங்களில் சிறு சண்டைகள் சச்சரவுகள் வந்தபோதும் குடும்பம் பிரிவது இல்லை. ஆனால், வசதியான திருமணங்கள் எளிய காரணம்கூட இல்லாமல் பிரிந்துவிடுகின்றன என்பதே நிஜம்.

எல்லாத் திருமணங்களும் சந்தோஷமாகவே தன் வாழ்க்கைப் பயணத்தைத் துவக்குகின்றன. ஆனால், இன்று உள்ள விவாகரத்து வழக்குகளைக் காணும்போது பெரும்பான்மையான பயணங்கள் துவங்கிய இடத்திலேயே முறிந்துவிடுவதை அறியமுடிகிறது. முக்கியக் காரணம், புரிந்துகொள்ளுதல், விட்டுக்கொடுத்தல், அன்பைப் பகிர்ந்துகொள்ளுதல் என இந்த மூன்றும் இல்லாத சூழல்.

பெண்களுக்குத் திருமணம் ஏற்படுத்தும் மௌனம் புரிந்துகொள்ளப்பட முடியாதது. அது ஒரு நீரூற்றைப் போல அவளுக்குள் கடந்த காலத்தின் நினைவுகளைப் பீறிட்டுக்கொண்டே இருக்கிறது. 'அமைதி எப்போதும் புன்னகையில்தான் வேர்விட்டு இருக் கும்' என்பார்கள். ஆனால், இன்று திருமணம் ஆனதும் பெண்களிடம் இருந்து, இயல்பான சிரிப்பு மறைந்துபோகத் துவங்குகிறது. அக நெருக்கடி முகத்தில் உறைந்துவிடுகிறது. சிரிப்பதற்குக் காரணம் தேவைப்படுகிறது என்பதே நமது அக வீழ்ச்சியின் அடையாளம்தானே!

சிரிப்பை மறந்த பெண்களை எனது பயணங்களில், ரயிலில், பேருந்தில், சாலை ஓரங்களில், அலுவலகங்களில் காண்கிறேன். தன்னை மீறி அவர்கள் சிரிக்கும் தருணங்கள் அரிதானவை. ஏதேதோ யோசனைகள், கவலைகள், விளக்க முடியாத திகைப்பு போன்றவை படிந்த பெண் முகங்களையே பொதுவெளியில் அதிகம் காண முடிகிறது. காலில் அப்பிய ஈரக் களிமண்ணைப் போல, மன வேதனைகளோடுதான் பெண் தன் வாழ்வினை முன்னெடுத்துப் போகிறாள்.

அப்படி ஒரு பெண்ணைப் பற்றியே 'தி கலர் பர்ப்பிள்' என்ற ஹாலிவுட் திரைப்படம் விவரிக் கிறது. மிக அற்புதமான படம். பத்துக்கும் மேற்பட்ட முறை அதைப் பார்த்திருக்கிறேன். ஆலீஸ் வாக்கரின் நாவலை ஸ்பீல்பெர்க் படமாக்கி உள்ளார். சுறா மீன்களையும், வேற்றுக்கிரகவாசிகளையும்,டைனோ சர்களையும் கொண்ட சாகசப் படங்களை இயக்கி, பெரும் வெற்றிபெற்ற ஸ்பீல்பெர்க்கூட சினிமா வெறும் வணிகம் மட்டுமில்லை என்பதை உணர்ந்து இயக்கிய இரண்டு படங்களில் ஒன்றுதான் 'The Color Purple'; மற்றது 'Schindler's List'.

'தி கலர் பர்ப்பிள்' படத்தில், சிலி ஜான்சன் என்ற முக்கிய வேடத்தில் வூப்பி கோல்ட்பெர்க் நடித் திருக்கிறார். 1900-களின் துவக்கத்தில் அமெரிக்காவில் வாழும் கறுப்பினப் பெண்ணின் வாழ்வை விவரிக்கும் இந்தப் படம், ஒரு பெண்ணின் 30 ஆண்டுக் காலக் குடும் பப் போராட்டத்தை மிக உண்மையாக விவரிக்கிறது.

தனது 14-வது வயதில் கர்ப்பிணி ஆகிறாள் சிலி. அதற்குக் காரணம் அவளது அப்பா. வளர்ப்புத் தந்தையே மகளைக் கெடுத்துக் கர்ப்பிணி ஆக்கிவிடுகிறார். அவ ளுக்கு என்ன செய்வது, யாரிடம்சொல்லி அழுவது என்று புரியவில்லை. குழந்தையைப் பெற்று எடுக்கிறாள். அதை அவளது அப்பா பிடுங்கிச் சென்றுவிடுகிறார். இந்த விஷயம் பற்றி யாரிடமும் அவள் சொல்லக்கூடாது என்று மிரட்டி, மனைவியை இழந்த ஆல்பர்ட் ஜான்சன் என்பவருக்கு சிலியைத் திருமணம் முடித்துவைக்கிறார்.

ஜான்சன் அவளை ஓர் அடிமை போல நடத்துகிறான். அவனுக்குச் சிலியின் தங்கை நட்டி மீது கண். ஒவ்வொரு நாளும் குடிவெறி அதிகமாகி அவன் சிலியை பாலியல் வன்புணர்ச்சிகொள்கிறான். நட்டி அக்காவின் கஷ்டங்களைக்கண்டு அவளுக்கு உதவி செய்யமுயற்சிக்கிறாள். படிக்கக் கற்றுத் தருகிறாள்.ஆனால், அந்தக் குடும்பத்தின் வீழ்ச்சியை அவளால் தடுக்க இயலவில்லை.

இந்த நிலையில் ஜான்சன் பாடகியான தன் பழைய காதலியை அந்த வீட்டுக்கு அழைத்துவருகிறான். அந்தப் பெண்ணுக்கும் சிலிக்கும் இடையே ஒரு பெயர் இல்லாத உறவு ஏற்படுகிறது. பரஸ்பரம் இருவரும்ஒடுக்கப்பட்ட பெண்கள் என்பதைப் புரிந்துகொள்கிறார்கள்.

நட்டி குடும்பத்தைப் பிரிந்து, கிறிஸ்துவ மிஷினரி களோடு போகிறாள். அவளது கடிதம் மட்டுமே ஆறுதல் தருவதாக உள்ளது. இதற்கு இடையில் சிலியின் பிள்ளைகள் அவளிடம் இருந்து பிரிக்கப்படுகிறார்கள். கணவன் அவளை வன்கொடுமைப்படுத்துகிறான். அவள் துயரத்தை மட்டுமே வாழ்வாகக் கொள்கிறாள். முடிவில் சிலியிடம் தான் மிக மோசமான மனிதனாக நடந்திருக்கிறோம் என்று உணர்ந்த ஜான்சன், தன் சேமிப்புப் பணம் முழுவதையும் செலவழித்து, அவளின் பிரிந்துபோன குழந்தைகளையும் தங்கையையும் அவளோடு ஒன்றுசேர்க்கிறான். படம் முழுவதும் சிலி ஒரு விலங் கைப் போலவே நடத்தப்படுகிறாள். ஒரு பெண் வெறி பிடித்த நாயைத் திருமணம் செய்துகொண்டு இருப்பது போலத்தான் இருக்கிறது.

பனியில் வாழும் பென்குவின் தன் இணையைத் தேர்வு செய்வதற்குக் காதலுடன் தேடுகிறது; கண்டு கொள்கிறது. தேடிச் சேர்ந்த பிறகு ஒருபோதும் வேறு ஒரு பென்குவினை நாடுவதே இல்லை. சில வேளைகளில் பெண் துணை இறந்துவிட்டால் பென்குவின்அந்தஏக்கத் துடன் அதே இடத்தைச் சுற்றிச் சுற்றி வருகிறது. வேறு எந்தப் பென்குவினையும் திரும்பிக்கூடப் பார்க்க மறுக்கிறது.

இணை சேரும் மிருகங்கள்கூடத் தங்களுக்குள்விளக்க முடியாத அன்புடன் இருக்கின்றன. படித்த, நவநாகரிகம் கொண்ட மனிதன் மட்டுமே திருமண விஷயத்தில் வால் இல்லாத நாயை நினைவுபடுத்துகிறான். அதுதான் கவலை தருகிறது!


எஸ்.ராமகிருஷ்ணன்