வெள்ளி, 23 அக்டோபர், 2009

தம்பதிகள் ஐந்து வகை...அதில் நீங்கள் எந்த வகை ?





'கோ.. கோ.. ஈகோ' என்று ஈகோவைத் தூக்கித் தூர எறியுங்கள். 'தோல்விகள்கூட காதலில் வெற்றிகளே' என்பது கில்லாடிகளுக்குத் தெரியும்!
ஆனால், பெரும்பாலானவர்களுக்கு இது தெரியாததால்... திரும்பிய பக்கமெல்லாம் 'டைவர்ஸ்' குரல் கேட்கிறது.

"இது சரிப்பட்டு வரவே வராது... இனி டைவர்ஸ்தான் ஒரே வழி!"என இப்போது முண்டியடிப்பவர்களில் முக்கால்வாசி பேர் இளம் தம்பதிகள்! உலகம் முழுக்க ஆண்டுதோறும் விவாகரத்து எண்ணிக்கை எகிறிக் கொண்டே போவதாக கவலை தருகின்றன புள்ளிவிவரங்கள்.

“சரிப்பட்டு வரலேனா டைவர்ஸ் பண்ணிக்கோப்பா!"என்பதுதான் லேட்டஸ்ட் அறிவுரை வேறு!

என்னவாயிற்று நம் குடும்ப வாழ்க்கை, கலாசாரத்துக்கு?!

காலில் சக்கரம் கட்டிக் கொண்டு கணவனும், மனைவியும் வேலைக்கு ஓடும் இந்தக் காலத்தில், இருவரும் இருந்து பேச, எண்ணங்களை பகிர்ந்துகொள்ள நேரம் கிடைப்பதில்லை. வார இறுதி நாட்கள், விடுமுறை என அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு கிடைக்கும் நேரத்திலும், பேச்சு விவாதமாகி, முடிகிறது சண்டையில். சண்டை நீண்டு, கடைசியில் கேட்கிறது விவாகரத்து!

''ஒருவரின் குணம், குற்றம், விருப்பு, வெறுப்பு, ஆசை, விரக்தி... என அனைத்தையும் அவர் மற்றவர்களுக்கு உணர்த்துவது, அவரின் உரையாடல் மூலம்தான். கணவன்மனைவிக்கு இடைப்பட்ட அந்த உரையாடலில், சண்டைகளும் சச்சரவுகளும் இயல்புதான். ஆனால், அதையெல்லாம் மீறி அவர்களின் வார்த்தைகளில் 'நான் உனக்காக இருக்கிறேன்' என்ற அன்பு அடிக்கடி உணர்த்தப்பட்டு, உணரப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அதுதான் தாம்பத்யத்தின் உயிர்!" என்று இல்லற விதி சொல்கிறார் ரினாடா பாரிஸ். இவர், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த உளவியலாளர். மனித உறவுகள் பற்றிய சிறப்புச் சிந்தனையாளர் (Relationship Specialist).

கடந்த பதினைந்து ஆண்டுகளாக, அமெரிக்காவில் குடும்ப விரிசல்களை சரி செய்து கொண்டிருக்கும் இந்த குடும்பநல ஆலோசகரின் முயற்சியால் ஆயிரக்கணக்கான விவாகரத்துகள் தடுக்கப்பட்டுள்ளன. இந்த அனுபவங்களையெல்லாம் வைத்தே... ஆறு நூல்களையும், நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார் ரினாடா பாரிஸ்.

''உலகம் முழுக்க இருக்கும் தம்பதிகளை அவர்களுக்கு இடையேயான உரையாடலின் அடிப்படையில் ஐந்து வகைகளுக்குள் அடக்கி விடலாம். நீங்கள் எந்த வகை என்பது, உங்கள் சுயமதிப்பீட்டுக்கு..." என சுவாரஸ்யமாக ஆரம்பிக்கும் ரினாடா, ஒவ்வொரு வகையையும் பிரித்து மேய்கிறார். அவரின் வார்த்தைகள், தம்பதிகள் ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே மனோ ரீதியாக பரிசோதித்துப் பார்த்துக் கொள்ளும் 'ரொமான்ஸ் லென்ஸ்' என்றே சொல்லலாம்.

'அமைதித் தம்பதி' (The Silent Couple): இதுதான் முதல் வகை. அமைதி என்றதும் உம்மணாமூஞ்சி என்று நினைத்து விடாதீர்கள். இவர்கள் நிறைய பேசுவார்கள்!

'பார்த்தீங்களா... எல்லை தாண்டி இந்தியாவுக்குள்ள சீனா பண்ற அட்டகாசத்தை..!'

'சுற்றுச்சூழல் பத்தி அருந்ததிராய் எழுதியிருக்கற அந்தப் புத்தகத்தைப் படிச்சீங்களா?'

இப்படி உலக நடப்புகளை எல்லாம் பேசித் தீர்ப்பார்கள். ஆனால், தங்களைப் பற்றி பகிர்ந்து கொள்ளமாட்டார்கள்!

'ஏன் டல்லா இருக்கிறே? எதாவது பிரச்னையா?' என்றெல்லாம் அக்கறையாக விசாரிக்க மாட்டார்கள். அப்படியே விசாரித்தாலும், 'ஒண்ணுமில்ல' என்று சொல்லிவிட்டால், 'சரி ஏதோ பர்சனல் (!) பிராப்ளம் போல' என்று விட்டுவிடுவார்கள்.

இவர்கள் வாழ்க்கையில் பெரிய சிக்கல்கள் எதுவும் இருக்காது. ஆனால், ஆத்மார்த்த புரிதலோ, அன்போ இருக்காது. 'வீட்டில் நமக்கு ஒரு துணை உண்டு' என்று சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்... அவ்வளவுதான்!

'சண்டையைத் தவிர்க்கும் தம்பதி' (The Argument -Avoiding couple): இது இரண்டாவது வகை. 'சரி விடும்மா... நீ சொல்றபடியே பண்ணிடலாம்!' என்பது இந்த வகை தம்பதிகளின் உரையாடல் முடியும் புள்ளி. 'தேவையில்லாம எதுக்குச் சண்டை' என அடுத்தவர் சொல்வதை ஒப்புக் கொள்வது, அல்லது ஒன்றுமே பேசாமல் மௌனமாகி விடுவது இவர்களின் வழக்கம். எனவே, மனதிலிருப்பதை வெளிப்படையாக, அந்நியோன்யமாக இவர்கள் பேசிக்கொள்வதும் ரொம்பக் குறைவு. பேச ஆரம்பிப்பார்கள். திடீரென ஒரு கருத்து வேற்றுமை வரும். உடனே ஒருவர் சைலன்டாகிவிடுவார்.

சண்டைக் கோழி தம்பதி (The Argument-Avoiding Couple): 'எப்போ சண்டை வரும்' என்று காத்திருக்கும் மூன்றாவது வகை. 'சாப்பாட்டுல ஏதோ குறையுதே...' என்று எதார்த்தமாகச் சொன்னாலும், 'உங்க அம்மா சமைச்சா மட்டும்தான் உங்களுக்குப் புடிக்கும்' என்று சீறுவார்கள். பூதக் கண்ணாடி போட்டு தன் பார்ட்னரிடம் குற்றம் கண்டிபிடித்து சண்டை பிடிக்கும் சீரியஸ் கேஸ் இவர்கள். பெரும்பாலும் இவர்களின் உரையாடல்கள் மனக்கசப்பில்தான் முடியும். இவர்கள் பெரும்பாலும் நிம்மதியின்றி மன அழுத்தத்தில் வாழ்ந்து கொண்டிருப்£ர்கள்.

'நட்புத் தம்பதி' (The Friends/Partners Couple): இவர்கள் நான்காவது வகை! நல்ல நட்புடன் அலுவலகம், குடும்பம் என பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். கேஷ§வல் கப்பிள் என்று இவர்களைச் சொல்லலாம். ஆனாலும், இவர்களுக்கிடையே அழுத்தமான குடும்ப உறவு, தாம்பத்ய நெருக்கம் இருக்காது. இருந்தும், வெளியிலிருந்து பார்ப்பவர்களால் எந்தக் குறையும் சொல்ல முடியாத குடும்பம் இது.

'நெருக்கமான தம்பதி' (The Fully Intimate Couple): இவர்கள் ஐந்தாவது வகை. 'இதுக்கு முன்னாடி ஒருத்தியை காதலிச்சு நாலஞ்சு வருஷம் சுத்தினேன்' என்பதுவரை வெளிப்படையாக பேசுவார்கள். எந்த விஷயத்தையும் ஒருவருக்கு ஒருவர் மறைக்க மாட்டார்கள். அடுத்தவரை அப்படியே ஏற்றுக் கொள்தலும், அர்ப்பணித்தலும்தான் இதன் ஹைலைட். அதனாலேயே ஆழமான குடும்ப உறவும், புரிதலும் இவர்களுக்கிடையில் இருக்கும். சொல்லப்போனால், இப்படி வாழ்வதற்கு அதிக பக்குவமும், அன்பும் தேவை. மிகச் சில தம்பதிகள்தான் இந்த வகைக்குள் வருவார்கள்!

இப்படி வகைப்படுத்தும் ரினாடா பாரிஸ், அனைவரும் இதில் ஐந்தாம் வகைக்கு முன்னேறுவதற்காக, தங்களுக்கு இடையேயான உரையாடலை அந்நியோன்யமாக எப்படி ஆக்கிக் கொள்ளலாம் எனபதற்கும் அற்புதமான ஆலோசனைகளையும் சொல்கிறார். அவை

முதலில், கணவன் மனைவி இருவரும் மனம் விட்டுப் பேசும் பழக்கம் வரவேண்டும்.

உரையாடல்களில் மிக முக்கியமான விஷயம், மரியாதை. அடுத்தவர் சொல்வதை கவனமுடனும், நேர்மையாகவும் கேட்கவேண்டும். 'நான் பிடிச்ச முயலுக்கு மூணு கால்' என்று நின்றால், நோ யூஸ்!

பொறுமையும் அவசியம். உங்கள் பார்ட்னர் பேசி முடிக்கும் வரை காத்திருந்து, பின் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். க்ளைமாக்ஸ் பார்க்காமல் தியேட்டரை விட்டு வெளியேறி கருத்து சொல்வது தப்பில்லையா?! எனவே, அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே, நடுவில் குதிக்காதீர்கள். எந்த முடிவையும் இருவரும் கலந்து பேசி எடுங்கள்!

உங்கள் துணையின் நம்பிக்கைகளை, விருப்பு, வெறுப்புகளை புண்படும்படி விமர்சிக்காதீர்கள்.

''உங்களாலதான்..." என்று குற்றம் சுமத்திப் பேசாதீர்கள். குற்றம், அனுமார் வால் போல நீண்டு கொண்டே இருக்கும்!

மனம் திறந்து உண்மையைப் பேசுங்கள். ஒருவேளை நீங்கள் பேசியது பொய் என்று துணைக்கு தெரியவரும் பட்சத்தில், உங்கள் மீதுள்ள நம்பிக்கை சிதைந்து, பின் உங்கள் உரையாடல் எப்போதுமே 'ஹெல்த்தி'யாக இருக்காது!

சின்னச் சின்னப் பாராட்டுகள் மிகவும் முக்கியம்.

உங்கள் துணை பேசுவதை கேட்காதீர்கள் (!)... கவனியுங்கள்! அதென்ன வித்தியாசம்? அவர் பேசும் வார்த்தைகளை காதில் வாங்குவது, கேட்பது; மனதில் வாங்குவது, கவனிப்பது. அவர் என்ன சொல்கிறார், என்ன மனநிலையில் சொல்கிறார், என்ன நோக்கத்துக்காகச் சொல்கிறார் என்பதெல்லாம் கவனித்தால்தான் புரியும். உங்கள் வாழ்க்கைத் துணையை நீங்கள் எந்த அளவுக்கு நேசிக்கிறீர்கள் என்பதை இந்தக் கவனிப்புதான் சொல்லும்! அதிகம் கவனித்தால், அதிகம் அந்நியோன்யமாவீர்கள்!

அப்போ, கவனிப்போமா..?!

நன்றி : அவள் விகடன்

4 comments:

யசோதா.பத்மநாதன் சொன்னது…

மிக அருமையான பதிவு.எல்லாத் தம்பதியரும் படித்துப் பயன் பெற வேண்டிய பதிவும் கூட.

வாழ்த்துக்கள்.

யசோதா.பத்மநாதன் சொன்னது…

உங்கள் இக்கட்டுரை பலரும் பயன் பெறும் பொருட்டு என் வலைப்பூவிலும் நன்றியோடு பதிவேற்றப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு அறியத் தருகிறேன்.

தொடர்ந்து உங்கள் பயனுள்ள கட்டுரைகளை பார்க்க ஆவல்.

Ashok D சொன்னது…

கணவன் Fully intimateடாகவும் மனைவி சண்டைகோழியாகவும் அமைந்துவிடுவதும் உண்டு. அப்போதுதான் பெருங்குழப்பம்.

//சண்டைக் கோழி தம்பதி (The Argument-Avoiding Couple?????)://
சரி செய்யவும் :)

malar சொன்னது…

ரொம்ப அருமையான பதிவி .