செவ்வாய், 13 அக்டோபர், 2009

எதிர் துருவங்கள்



யாராவது அமுதம் வேண்டாம் என்று சொல்வார்களா? மதுமிதா சொல்வாள்!

ஆம்... 'அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு' என்பதை தீவிரமாக மனதுக்குள் ஜபித்துக் கொண்டிருப்பவள் மதுமிதா. காரணம்... அவள் கணவன் திவாகர் அவளிடம் அன்பை வெளிப்படுத்தும் அதீத முறைகள்தான்!

"சர்ப்ரைஸ் கொடுக்கறேன்னு சில நாள், நான் எழுந்து கோலம் போடப் போறதுக்கு முன்னாடியே வாசல் கூட்டி, தெளிச்சு வச்சுடறார். தெருவுல பார்க்கறவங்க என்ன நினைப்பாங்க?"

"எனக்கு பிங்க் கலர் பிடிக்கும்னு சொன்னேன்ங்கறதுக்காக ஒரே நேரத்துல பத்து பிங்க் கலர் சுடிதார் எடுத்துட்டு வர்றார். வேஸ்ட்தானே?"

"அவங்க அண்ணா, அண்ணிகிட்ட... 'நான் என் பொண்டாட்டிய செல்லமா 'ஏஞ்சல்'னுதான் கூப்பிடுவேன்'ங்கறார். மானம் போகுது"

- இப்படியாக நீளுகின்றன மதுமிதாவின் குற்றச்சாட்டுகள்.

"என் பொண்டாட்டி மேல உயிரையே வச்சிருக்கேன். அதை அவகிட்ட நான் பின்ன எப்படிப்பா எக்ஸ்பிரஸ் பண்ணுவேன்?

- டாஸ்மாக் கடை ஒன்றின் பக்கத்து டேபிளில் இருந்த முகம் தெரியாத நபரிடம் திவாகர் உளறிய வார்த்தைகள் இவை. டாஸ்மாக் போகும் அளவுக்குக் குடும்பத்தில் அப்படி என்ன குழப்பம் கும்மி-யடிக்க ஆரம்பித்துவிட்டது?

திருமணமாகி ஐந்து மாதங்-கள்கூட முடியவில்லை. மாலை மயங்கிய நேரங்களில் பூவோடு வந்தவனை, "எதுக்கு இவ்வளவு பூ? கொஞ்சமா வாங்கிட்டு வாங்-கனு சொன்னா... கேட்க மாட்டீங்களே!" என்றாள் மது.

அடுத்த நாள் வருத்தம் மறைத்து, "இன்னிக்கு நான் டின்னர் பண்றேன்" என்று ஆசையாகக் கிளம்பியவனை, "ஆம்பளையா... லட்சணமா இருங்க" என்றாள் கண்டிப்புடன்.

மற்றொரு நாள்... "உனக்குப் பிடிச்ச பாஸந்தி வாங்கிட்டு வந்திருக்கேன்" என்றவனை, "ஐயோ... இந்த அஞ்சு மாசமா நீங்க அதையே வாங்கிக் கொடுத்ததுல எனக்கு பாஸந்தியே வெறுத்திடுச்சுப்பா" என்றாள். இப்படியாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வருத்தங்கள் எழுந்தன அவர்களுக்குள். விளைவு... திவாகர் வாங்கி வந்த பூவின் வாசம் சில தினங்களாக தொடர்ந்து மறுக்கப்பட்டது. அவன் டாஸ்மாக் வாசம் பிடிக்கத் துவங்கிவிட்டான்.

எதிர் எதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்குமாம். ஆனால், இங்கே அதற்கு நேரெதிர்.

திவாகர் மற்றவர்களை மகிழ்விப்பதற்காக குட்டிக்கரணம்கூட அடிக்-கும் ரகம். நண்பர்களுக்கு அவர்களின் குடும்ப போட்டோக்களைத் தேடிப் பிடித்து பிறந்த நாளுக்கு ஃப்ரேம் செய்து கொடுத்து, அவர்கள் சந்தோஷப்-படுவதைப் பார்த்து, தான் சந்தோஷப்படும் பிரியக்காரன். நண்பர்களுக்கே இப்படி சர்ப்ரைஸ்கள் கொடுத்து சந்தோஷப்படுத்துபவன், தன் மனைவிக்காக எத்தனை சர்ப்ரைஸ்களை தேக்கி வைத்திருப்பான்? அதன் வெளிப்பாடுகள்தான் இப்போது மதுமிதாவின் குற்றச்சாட்டுகளாக வடிவெடுத்து நிற்கின்றன.

மதுமிதாவும் அன்பானவள்தான். ஆனால், அவள் வளர்ந்த சூழலில் நிலவிய அன்பு பரிமாறல்கள் அத்தனையும் வேறு ரகம். எப்போதாவது அம்மாவைக் கோயிலுக்கு அழைத்துச் செல்லும் அப்பாவின் அன்பும், கல்யாண நாளில் மனைவிக்கு புடவை வாங்கிக்கொடுத்து 'நல்லாயிருக்கா?' எனும் அண்ணனின் அன்பும்தான் அவள் அறிந்தது.

ஆனால், திவாகர் காட்டும் அன்பு அனைத்துமே இவளுக்கு அதிர்ச்சி ரகம்தான். இருவரையும் ஊர் கூடி உறவு பந்ததில் இணைத்து வைக்க, முதலிரவு அன்று கைகளில் பால் ஏந்தி வந்தவளை, "ஒரு சேஞ்சுக்கு பீர் தரமாட்டீங்களா?" என்று திவாகர் கேலி செய்ய, 'ஐயையோ... ஒரு அயோக்கியன்கிட்ட மாட்டிக்கிட்டோமே' என்று அன்றே பதறிப்போனாள் மது. தொடர்ந்த நாட்களில் சந்தடி சாக்கில் புதுப் பொண்டாட்டியை முத்தமிட துடித்த திவாகரை ரவுடியாகவே பார்த்தாள். அவனின் சின்ன சின்ன விளையாட்டுகள் எல்லாமே அவளுக்கு திகட்டச் செய்தன. தள்ளித் தள்ளிச் சென்றாள். ஆனால், அது எத்தனை நாளைக்கு நீடிக்கும். அன்று காத்திருந்தது... அவர்களின் இடைவேளைக்கான க்ளைமாக்ஸ்!

திவாகர் மேல் எழுந்த அதிருப்தியை மறக்க, டி.வி. சீரியல் பார்க்க ஆரம்பித்திருந்தாள் மது. சீரியலில் கை தவறி கதாநாயகி காபி டம்ளரை கீழே கொட்டி விட, 'பளார்' என கன்னத்தில் அறைந்தான் அவள் கணவன். மதுவுக்கு திவாவின் நினைவு வந்தது. அன்று ஆபீஸுக்கு கிளம்பியவன், சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது இவள் கைதவறி சாம்பாரை கொட்டிவிட, "அட... சாம்பார்லகூட மார்டன் ஆர்ட் வரைவியா நீ?" என்றபடியே வேறு சட்டை மாற்றிக்கொண்டான்.

அடுத்து ஒரு சீரியல். உடம்பு முடியாமலிருக்கும் தன் மனைவியை என்னவென்றுகூட கேட்காமல் இருந்த அந்த சீரியல் கணவனைப் பார்த்தபோது, இவள் தலைவலிக்கு தைலம் தடவிவிட்ட திவாவின் விரல்களை நெஞ்சம் தேடியது.

இரவு இன்னுமொரு சீரியல். மளிகை வாங்கக் கொடுத்த நூறு ரூபாய்க்கு தன் மனைவியிடம் கறார் கணக்கு கேட்டுக்கொண்டிருந்தான் அந்த சீரியல் ஹீரோ. திருமணம் முடிந்த மாதமே மது பெயரில் பேங்க் அக்கவுன்ட் ஆரம்பித்து தந்த திவாவின் ஞாபகம் மட்டுமல்ல... அவன் சீக்கிரமாக வரும் மாலை நேரங்களில் தன்னைச் சுற்றி சுற்றி வருவது, காதுக்குள் 'ஏஞ்சல்' என்று கிசுகிசுப்பது, உள்ளங்கையில் முதல் முத்தம் வைப்பது என... ஒவ்வொன்றாக அவள் மனதுக்குள் மின்னின.

'எத்தனையோ பெண்கள் கணவனோட அன்புக்காக ஏங்கிக்கிட்டிருக்கும்போது, அன்பே கணவனா கிடைச்ச திவாவை புரிஞ்சுக்காம விட்டுட்டோமே' என்று முழு மனதாக வருந்தினாள் மது. வாசலில் திவாவின் அழைப்பு மணி கேட்டது. கதவைத் திறந்தவள், இந்த கணத்துக்காகத்தான் காலமெல்லாம் காத்திருந்தது போல அவனைக் கட்டிக் கொண்டாள்.

"என்ன... மோகினிப் பேய் இன்னும் சாப்பிடாம இருக்கு?!" என்று வழக்கம் போல திவா கிண்டலடிக்க, "ம்ம்... ஜோடிப் பேய்க்காக காத்திட்டு இருக்கு" என்று தானும் அவன் மொழி பேசினாள்!

ஆம்! இங்கே எதிர் எதிர் துருவங்கள் சமபுள்ளியில் மையம் கொண்டுவிட்டன.

8 comments:

ஜெஸ்வந்தி - Jeswanthy சொன்னது…

இந்தக் கதைகளில் இருந்து வாழ்க்கைப் பாடம் படித்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

இராயர் சொன்னது…

நிஜமாக ,கதைகளில் இருந்து நல்ல விஷயத்தை எடுத்து கொள்கிறேன்

Unknown சொன்னது…

very nice

*இயற்கை ராஜி* சொன்னது…

hi
i have given intro about your blog in tha link below.. pls see it

http://blogintamil.blogspot.com/2009/10/blog-post_22.html

க.பாலாசி சொன்னது…

//'எத்தனையோ பெண்கள் கணவனோட அன்புக்காக ஏங்கிக்கிட்டிருக்கும்போது, அன்பே கணவனா கிடைச்ச திவாவை புரிஞ்சுக்காம விட்டுட்டோமே' என்று முழு மனதாக வருந்தினாள் மது.//

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்.

நல்ல கதை...

இளந்தமிழன் சொன்னது…

படிக்கும்போதே அதைபோன்ற காட்சிகள் மனதிற்குள் ஓடுகிண்டறன !
மிகவும் சிறப்பாக இருந்தது.

விக்னேஷ்வரி சொன்னது…

அழகான நடை. ரசித்தேன்.

இராயர் சொன்னது…

Very thanks to Iyarkai for your supports